அணு ஆயுத தடை சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் இன்று (மார்ச் 5, 1970).

அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம், அணுக்கரு ஆயுதங்கள் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும். 1968 இயற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 189 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இசுரேல், வட கொரியா, தெற்கு சூடான்ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. தொடக்கத்தில் வட கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பிறகு அதை மீறியது. இறுதியாக 2003ல் இந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டது. இந்த ஒப்பந்தம் அணுக்கரு உலைகள் கட்டவும் அணுவாற்றலை அமைதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள்1. அணு ஆயுதப் பரவலைத் தடைசெய்வது 2. அமைதி நோக்கங்களுக்கான அணு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவது,3. முற்றிலுமாக அணு ஆயுதங்களை ஒழிப்பது.இந்த ஒப்பந்தத்தின்படி சீனா, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் இரசியா என்ற ஐந்து நாடுகள் மட்டுமே அணுக்கரு ஆயுதங்களை வைத்திருக்க அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. சனவரி 1 1967 ஆம் நாளிற்கு முன்னால் அணுவாயுதம் தயாரித்த நாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுத நாடுகள் என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுதங்களை தயாரிக்க மற்றநாடுகளுக்கு உதவ மாட்டோம் என உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.பிற நாடுகள் தாங்கள் அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்றும் மற்றவர்கள் தயாரிக்க உதவ மாட்டோம் என்றும் கையொப்பமிட்டுள்ளன.1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும் அணுகுண்டுகள் போடப்பட்டன. அணுகுண்டு தாக்குதல்களால், 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அச்சமயத்தில் உயிர் பிழைத்தவர்கள், தற்போது 82 வயது என்ற விகிதத்தில் ஏறத்தாழ 1 இலட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர்.உலகில் தற்போது 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என, செய்திகள் கூறுகின்றன.ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா தவிர இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் தற்போது அணு ஆயுதம் வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. 2003-ல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். 1970-ல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகுதான் வட கொரியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அணு ஆயுத நாடுகளாயின. இவற்றில் தென் ஆப்பிரிக்கா நிறவெறி அரசு நீக்கப்பட்டதும் அணு ஆயுதங்களைக் கைகழுவிவிட்டது.இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலகத்துக்கே தெரிந்தாலும் அதிகாரபூர்வமாக அந்நாடு இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அமைதிக்கான அணு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு என்பது நடைமுறையில் எப்படி இருக்கிறது? மேற்கத்திய நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணு உலைகளை விற்கத் தங்களது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றன. அந்த அளவில்தான் ஒப்பந்தத்தின் இரண்டாவது நோக்கம் இருக்கிறது. கடைசியாக – முழுமையான அணு ஆயுத ஒழிப்பு. இது எந்த அளவில் சாத்தியம் என்று பார்ப்போம். அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள்தான் இதனை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால், அந்நாடுகள் அதற்குத் தயாராக இல்லை. சொல்லப்போனால், இந்த ஐந்து நாடுகள்தான் பிற நாடுகளுக்குப் பெரிய அளவில் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்கின்றன.ஆயுத ஏற்றுமதிக்காக உலகையே பதற்றத்தில் வைத்திருக்கும் வகையில் போட்டி போட்டுக்கொண்டு ஆயுத விற்பனை செய்வதால், பல நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுக்கு இணையாக ஆயுதங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வேறு. பாதுகாப்பு விஷயத்தில் அதிக நிதியை ஒதுக்குவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாமல் அந்நாடுகள் திணறுகின்றன. தென் கொரியாவில் அமெரிக்கா அளித்துவரும் ராணுவரீதியான ஒத்துழைப்பால், அச்சமடைந்த வட கொரியா, ஏவுகணைகளையும் அணு ஆயுதத்தையும் உற்பத்திசெய்தது. சமீப காலமாக, அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் மூலம், தென் கொரியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் நேரடியாக மிரட்டல் விடுத்தது வட கொரியா.ஆனால், வட கொரியா மீது அமெரிக்காவால் ராணுவ நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மாறாக, வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. காரணம், தென் கொரியா மீதும் ஜப்பான் மீதும் அணு ஆயுதங்களை வீசப்போவதாக வட கொரியா மிரட்டினாலே அமெரிக்கா பணிந்துவிடும். பாகிஸ்தான் விஷயத்திலும் இதே நிலைதான்.வளர்ந்த நாடுகளின் அச்சுறுத்தலின் காரணமாக, அணு ஆயுதங்களைத் தங்கள் தற்காப்புக்காக உருவாக்கும் நிலைக்குச் சில நாடுகள் தள்ளப்பட்டன என்பதை மறுக்க முடியாது. இந்தச் சூழலில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்துவருகின்றன! Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..