தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்தார். அவரை வரவேற்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கட்சி தொண்டர்கள் வேன்களில் குவிந்தனர். அந்த வகையில் பாவூர்சத்திரத்தில் நடைபெறவிருக்கும் முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க சென்ற அதிமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்ற வாகனம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் விலக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலர் காயமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள அண்ணாமலை புதூரில் இருந்து ஜனதா முத்தையா பாண்டியன் தலைமையில் தமிழக முதலமைச்சர் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாவூர்சத்திரம் நோக்கி சென்ற T.N.38 D. 2616 எண் கொண்ட மகேந்திரா வேன் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் விலக்கு அருகே எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் மொத்தம் 27 ஆண்களும், 19 பெண்களும் அமர்ந்து வந்துள்ளனர். இவர்களில் 4 நபர்களுக்கு ரத்தகாயமும் மற்ற நபர்களுக்கு ஊமை காயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரைந்து வந்த போலீசாரும், வருவாய்த் துறையினரும் காயமுற்ற அனைவரையும் மீட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வரை வரவேற்க்க சென்ற வேன் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.