குடியிருக்க இலவச வீடு வழங்க கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.மதுரை மேல பொன்னகரத்தைச் சேர்ந்தவர் நன்மாறன். இவர் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். பதவிக் காலத்திலும் சரி அரசியலும் சரி நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்றியவர் என்று மாற்றுக் கட்சியினரால் பெயர் பெற்றவர். இந்நிலையில் நன்மாறன் நேற்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார்.குறை தீர் முகாமில் பொதுமக்களுடன் வரிசையில் மனு கொடுப்பதற்காக காத்திருந்தார். அங்கு அவரை அடையாளம் கண்டறிந்த சிலர் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரியிடம் அறிமுகப்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து நன்மாறன் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார் அந்த கோரிக்கை மனுவில் “நான் இப்போது மதுரை மேல பொன்னகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை இதனால் மாதா மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரம நிலையில் உள்ளேன். எனவே மதுரை ராஜாகூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கி தரும்படி கேட்டுக் கொள்கிறேன், என அந்த மனுவில் கூறியிருந்தார்.பிறகு நன்மாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனக்கு நிரந்தரமாக குடியிருக்க வீடு இல்லை. எனவே மதுரை ராஜாக்கூரில் அரசாங்கம் சார்பில் கட்டித்தரப்படும் குடியிருப்பில் இலவச வீடு கேட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளேன் , என்றார். அவரிடம் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள் உங்களுக்கு சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், கட்சியிலும் நண்பர்களிடமும் உதவி ஏதும் கேட்டீர்களா எனக் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே நான் யாரிடமும் கேட்கவில்லை என தெரிவித்து விட்டு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.