சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson) பிப்ரவரி 14, 1869ல் ஸ்காட்லாந்தில் மிட்லோத்தியன் என்ற ஊரில் ஜோன் வில்சன், அன்னி கிளர்க் ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு விவசாயி. 1873 ஆம் ஆண்டில் தந்தை இறக்கவே, இவரது குடும்பம் மான்செஸ்டருக்கு இடம்பெயர்ந்தது. ஓன்சு கல்லூரியில், உயிரியல் பட்டப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் கேம்ப்ரிட்ச், சிட்னி சசெக்சு கல்லூரியில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக் கற்றார். பின்னர் இவர் வானிலையியலில் விருப்பம் கொண்டு, 1893ல் முகில் மற்றும் அதன் இயல்புகளை ஆராய்ந்தார். பென் நெவிசு என்ற இடத்தில் உள்ள வானியல் அவதான நிலையத்தில் பணியாற்றும் போது முகில்த் தோற்றம் பற்றி அவதானித்தார். இதனை அவர் பின்னர் கேம்பிரிட்சில் உள்ள ஆய்வுகூடத்தில் சிறிய அளவில் அடைக்கப்பட்ட கலன் ஒன்றில் ஈரப்பதன் கொண்ட வளிமம் மூலம் சோதித்தார்.
முகிலறை (Wilson cloud chamber) என்பது மின்னூட்டமுடைய துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி. அயனியாக்கும் கதிர்கள் தான் செல்லும் பாதையிலுள்ள வளியினை அயனியாக்கும் பண்புடையன. கதிர்களின் பாதையைக் காணவும் படம் எடுக்கவும் இக்கருவி பயன்படுகிறது. அயனிகளைத் தனியாகக் காண முடியாது. எனினும் நீர் திவலையின் அடுக்கு ஒரு கோடு போல், அயனியின் பாதையைக் காட்டும். மீ தெவிட்டிய ஆவியில் இது நிகழும். வில்சன் இதனை முதன் முதலில் வடிவமைத்ததால் இது வில்சன் முகிலறை எனப்படுகிறது. இக்கண்டுபிடிப்புக்காக வில்சனுக்கு 1927 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
1920கள் முதல் 1950கள் வரை குமிழறைகள் கண்டுபிடிக்கப்படும் வரை துகள் இயற்பியலில் முகிலறைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. குறிப்பாக, 1932ல் பாசிட்ரான், 1936ல் மியூயான், 1947ல் கேயான் போன்றவை முகிலறைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அயனிகளாலும், கதிர்வீச்சினாலும் ஏற்படக்கூடிய முகிற்சுவடுகளை அவதானித்தார். முகிலறையைக் (Wilson cloud chamber) கண்டுபிடித்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சார்ல்சு தாம்சன் ரீஸ் நவம்பர் 15, 1959ல் தனது 90அகவையில் எடின்பரோ ஸ்காட்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
You must be logged in to post a comment.