போலி ஆவணங்கள் பாஸ்போர்ட்: நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: போலியான ஆவணங்களை கொடுத்து அகதிகள் பாஸ்போர்ட் பெறுவதை தடுக்க கோரிய வழக்கில், பாஸ்போர்ட் பெறுவதற்கு சோதனை செய்யும் காவல்துறை உட்பட அனைத்து துறை அலுவலர்களும் மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த முருக கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், “இந்தியாவை சேர்ந்த மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு 1967ஆம் வருடம் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி விண்ணப்பதாரர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும், முகவரி மற்றும் அடையாளம் இருக்க வேண்டும்.பாஸ்போர்ட் பெறுவதற்கான மண்டல அலுவலகம் மதுரையில் உள்ளது. “பாஸ்போர்ட் சேவா கேந்திரா” மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ளது. சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இந்திய தபால் அலுவலகத்துடன் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஏழு கட்ட பரிசோதனைகள் செய்த பின்பே தனிநபருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

இதில் முக்கியமாக மூன்று கட்ட காவல் துறையினர் பரிசோதனையானது நடைபெறுகிறது. இதன்படி பாஸ்போர்ட் பெறுபவரின் முகவரி, பாஸ்போர்ட் பெறுபவர் மீது வழக்கு ஏதும் உள்ளதா? பாஸ்போர்ட் பெறுபவர் அடையாளம் சரியாக உள்ளதா? என்ற சோதனைகள் நடைபெறுவது வழக்கம். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக 53 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.இவர்கள் போலியான இருப்பிட சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்தது தெரியவந்தது. இதில் அதிகமான இலங்கை அகதிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அகதிகளாக உள்ள இவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல முடியும், சட்ட விரோத நடவடிக்கை நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளது. க்யூ பிரிவு காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

எனவே இடைக்கால உத்தரவாக தமிழ்நாடு காவல் துறை தலைவர் தலைமையில் நிலுவையில் உள்ள போலி பாஸ்போர்ட் வழக்குகளை உரிய நேரத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும். உடனே இந்த வழக்குகளை சிபிஐ அல்லது அதற்கு இணையான வேறொரு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வருங்காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பாஸ்போர்ட் சம்பந்தமாக இதுவரை 175 நபர்கள் விசாரணை செய்யப்பட்டு 22 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பாஸ்போர்ட் பெறுவதற்காக விசாரணையில் ஈடுபடும் காவல் துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலுள்ள அலுவலர்கள் மனுதாரரின் மனு குறித்து மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுதாரரின் மனுவில் பொதுநலம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..