ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீர் அப்புறப்படுத்தநடவடிக்கை

இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (19.12.2020) நேரில் சென்று நகராட்சி நிர்வாகம் மூலம் மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 16 மழை மானிகளில் 18.12.2020 அன்று மொத்தம் 464.40 மி.மீ அளவும், சராசரியாக 29.03 மி.மீ அளவும், 19.12.2020 அன்று மொத்தம் 309.50 மி.மீ அளவும் சராசரியாக 19.34 மி.மீ அளவும் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட சில குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் தெரு பகுதியில் தேங்கியுள்ளமழைநீரை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் விசைபம்பு மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல, வசந்த நகர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை தற்காலிக வடிகால் மூலம் அப்பகுதியிலுள்ள கொடலைக்கார ஊரணியில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். மேலும், மாவட்டத்தில் பரவலாக தொடர்மழை இருக்கக்கூடும் எனவும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழாமல்உடனுக்குடன் போர்க்கால அடிப்படையில் அருகே உள்ள நீர்நிலையில் சேமித்திட வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் (பொ)நிலேஸ்வர்உடனிருந்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..