தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் பாறையடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.அவரது மனைவி ரம்யா (27) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 22ம் தேதி நள்ளிரவு சுமார் 1-00 மணியளவில் வீட்டுக்கு வெளியே வந்த போது பாம்பு கடித்துள்ளது. இதனால் அவரும் அவரது கணவர் ரமேசும் சிகிச்சைக்காக சுரண்டை மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை கிடைக்காத நிலையில் பரிதவித்து வந்துள்ளனர்.அப்போது காவல்துறை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஏட்டு சமுத்திரக்கனி இரவில் நடமாடிய அவர்களை விசாரித்த போது நிலைமையை உணர்ந்து உடனடியாக சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கும் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படும் நிலையில் டாக்டர் இல்லாததால் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் அவர்கள் பாம்பு கடித்தவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ஆனால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ, வாடகை கார் எதுவும் நள்ளிரவில் கிடைக்காத நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் அனுமதியுடன் போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்று இரவு 2-10 மணிக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து கூடவே இருந்து உதவி செய்துள்ளார்.தற்போது பாம்பு கடியில் அவதிப்பட்ட ரம்யா நலமுடன் உள்ளார். நள்ளிரவில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணை மனிதாபிமானத்துடன போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த போலீஸ் ஏட்டை பொதுமக்கள் பாராட்டினர். இவர் ஏற்கனவே கொரோனா காலத்தில் பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியதும் அதனால் மாஸ்க் ஏட்டு என்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.