ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓடையில் குளிக்க சென்ற 3 இளைஞர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் அடித்துச் செல்லப்பட்டதால் 3 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலை அடிவாரத்திலுள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. மேலும் வனத்தில் பெய்யும் மழையால் பேச்சியம்மன் கோயில் ஓடை, பேயனாற்று ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் உள்ள அத்திதுண்டு என்ற இடத்தில் பேமலையான் கோவில் அருகே குளிக்கச் சென்ற கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபி, பால்பாண்டி, முத்துக்கருப்பன் ஆகிய 3 பேரும் நீரின் வேகத்தை தாங்க முடியாததால் ஓடையில் இழுத்துச் செல்லப்பட்டனர். உடன் குளிக்கச் சென்ற சிலர் காப்பாற்ற முயன்றும் அது தோல்வியை தழுவியதால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் உறவினர்கள் அப்பகுதியில் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..