இந்தியா முழுவதும் பல கோளரங்கங்களை நிறுவிய அரவிந்த் பட்நாகர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 19, 1936).

அரவிந்த் பட்நாகர் (Arvind Bhatnagar) நவம்பர் 19, 1936ல் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பீவார் நகரில் பிறந்தார். இயற்பியலில் பட்டமேற்படிப்பை முடித்த இவர் 1958 ஆம் ஆண்டு நைனிடாலில் உள்ள உத்தரப்பிரதேச மாநில வானாய்வகத்தில் பணியில் சேர்ந்தார். 1961 ஆம் ஆண்டு வரை இங்கு பணிபுரிந்தார். கொடைக்கானலில் உள்ள வானாய்வகத்தில் பணியாற்றிக் கொண்டே ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1964 ஆம் ஆண்டு சூரிய இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்காக பேராசியர் எம்.கே.வைணுபாப்பு இவருக்கு வழிகாட்டியாக இருந்தார். 1968-70 காலத்தில் அமெரிக்காவிலுள்ள மவுண்ட் வில்சன் மற்றும் பலோமர் கோளரங்குகளில் பணிபுரிய இவருக்கு கார்னகி ஆய்வுதவித் தொகை அளிக்கப்பட்டது. பட்நாகர் 1972 ஆம் ஆண்டு வரை கலிபோர்னியாவின் பசாதெனாவிலுள்ள கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்விநிறுவனத்திற்குச் சொந்தமான பிக் பியர் சூரிய வானாய்வகத்தில் நிரந்தர வானவியலாளராகப் பணியாற்றினார்.

அகமதாபாத் வேதசாலையின் வழிகாட்டலின் கீழ், உதய்பூர் ஏரி பதேசாகரின் மத்தியில் ஒரு தனிப்பட்ட தீவாக சூரிய ஆய்வுமையத்தை நிறுவுவதற்காக பேராசிரியர் பட்நாகர் 1972 ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார். இராஜஸ்தான் மாநிலத்தின் அதிகபட்ச சூரிய ஒளி பெறும் இடத்தை தேர்வு செய்தார். சூரிய கதிர்வீச்சு காரணமாக மைதானத்தின் வெப்பமூட்டப்படும் காற்று கொந்தளிப்பைக் குறைக்க ஏரியின் நீர் உதவுகிறது என்ற உண்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர், ஏரியின் தளத்தை கவனமாக இவர் தேர்வு செய்தார். வேகமான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இவர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக 1981 ஆம் ஆண்டு விண்வெளித் துறையில் கட்டுப்பாட்டிற்கு இவ்வானாய்வகம் மாற்றப்பட்டது. அனைத்துலக அளவில் சூரிய ஆய்வுகள் மேற்கொள்ளும் ஒரு வானாய்வகமாக புனரமைக்கப்பட்டது. உலகம் முழுவதுமுள்ள சூரியனின் உட்பகுதியை ஆய்வு செய்யும் ஆறு நிலையங்களில் ஒன்றாக இவர் நிறுவிய ஆய்வு மையம் திகழ்கிறது.

அக்டோபர் 24, 1995ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது நடந்த நிகழ்வுகள், டாக்டர் அரவிந் பட்நாகரின் அறிவியல் சாதனையில் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். மிக்-25 விமானத்தில் 80000 அடி உயரத்தில் 3000 கிலோமீட்டர் வேகத்துடன் டாக்டர் அரவிந் பட்நாகர் கிரகணப் பாதையில் பயணம் செய்து மேற்பார்வை செய்தார். இக்கவனிப்பு நிமிடங்கள் பொன்னான நிமிடங்களாகக் கருதப்படுகின்றன. தரையிலிருந்து உற்றுநோக்கியபோது தெரியாத பல உண்மைகள் அப்போது வெளிப்பட்டன. கிரகணத்தின்போது பூமியில் விழும் சூரிய நிழலின் அளவீட்டைக் கொண்டு இதுவரையில் அறியப்படாத சூரியனின் சரியான விட்டத்தை அளவிட இந்திய விஞ்ஞானிகள் இம்முயற்சியை மேற்கொண்டனர். இன்னமும் சூரியனின் சரியான விட்ட அளவு துல்லியமாகத் தெரியாத நிலையே உள்ளது. மூன்று இந்திய விமானப்படை விமானங்களில் நிழல் ஆய்வு செய்யும் புகைப்படக்காரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பயன்படுத்தப்பட்டனர். இதைத் தவிர, சூரியனின் வெளிப்புற ஒளியையும் அதைச்சுற்றியுள்ள தூசி வளையத்தையும் இருண்ட, முடிந்தளவு தெளிவான வானத்தில் புகைப்படம் எடுக்க உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஒரு சோடி இந்திய விமானப்படை மிக் 25 போர்விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

1996 ஆம் ஆண்டில், பேராசிரியர் பட்நாகர் சுச்சி என்ற புதுமையான ஒரு திட்டத்தை தொடங்கினார். (சோதனைக்குகந்த, ஆரோக்கியமான, நகரிய, தூய்மையான, துப்புரவான சுற்றுச்சூழல் என்ற பொருளை மையமாக வைத்து ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தாக SUCHE எனப்பட்டது). திடக்கழிவு மேலாண்மையை பொதுமக்கள் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் உதய்பூர் ஏரி அமைப்பைப் பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். சூரிய வானியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். இந்தியா முழுவதும் பல கோளரங்கங்களை நிறுவினார். சூரிய வானியல் துறையில் இவர் ஆற்றியுள்ள அளப்பறிய பங்களிப்புகள் காரணமாக பேராசிரியர் அரவிந் பட்நாகர் அனைத்துலக அளவில் அறியப்படுகிறார்.

வானியல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்நோக்கத்துடன் நாடு முழுவதும் பல்வேறு கோளரங்கங்கள் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தியா முழுவதும் பல கோளரங்கங்களை நிறுவிய அரவிந்த் பட்நாகர் மே 18, 2006ல் தனது 69வது வயதில், உதயபூர், இராஜஸ்தானில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அறிவியல் அறிஞராகவும் ஒரு சமுதாய முன்னேற்ற சீர்த்திருத்தவாதியாகவும் இவர் நினைக்கப்படுகிறார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..