மதுரையில் மிகவும் பிரபலமான கோவிலாக பாண்டி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கோவிலில் துணை பூசாரியாக மதுரையை அடுத்த ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த குருசாமி மகன் முத்துராஜா என்பவர் இருந்து வந்துள்ளார்.
இவர் நேற்று (10/10/2020) மதியம் 3 மணி அளவில் கோவில் அருகே இருந்தபோது வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
உடனடியாக தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் காவல் துறை காவல்துறையினர் மற்றும் காவல்துறை இணை ஆனணயர் சிவபிரசாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களையும் சேகரித்துள்ளனர்.
மேலும் அங்கு ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் ஒரு வருடத்திற்கு முன்பு காதுகுத்து விழாவில் முத்துராஜாவுக்கும் கருப்பாயூரணியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் தகராறு நடைபெற்று வந்ததாகவும், அதற்கு பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலையாளிகள் குறித்து போலீசார் தேடி வருகின்றனர். நேற்று (10/10/2020) வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.