அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்கள் மற்றும் அதன் தன்மைகளைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் என்றிக் டேவிட் போர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 7, 1885).

நீல்ஸ் என்றிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr) அக்டோபர் 7, 1885ல் டென்மார்க் நட்டைச் சேர்ந்த கோப்பன்ஹேகனில் பிறந்தார். இவரின் தந்தை கிறிசிட்டியன் போர், கிறித்தவ மதத்தின் உலுத்திரன் பிரிவு மதத்தின் வழிபாட்டாளராக இருந்தார். இவர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உடலியக்கவியல் பேராசிரியராக இருந்தார். தாய் எல்லென் நீ ஆட்லர்போர் செல்வாக்கு மிக்க யூதக் குடும்பத்தில் இருந்து வந்தவர். நீல்ஸ் போரின் தம்பி ஹெரால்டு போர் (Harald Bohr), கணிதவியலராகவும், டென்மார்க்கின் தேசிய கால்பந்தாட்ட வீரராகவும் இருந்தார். நீல்ஸ் போர் கால்பந்தாட்ட விளையாட்டு வீரரும் ஆர்வலரும் ஆவார். கல்வித் துறை சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த தாயார், உடலையல் துறையில் சிறந்து விளங்கிய தந்தை ஆகியோரின் பராமரிப்பில் இவர்கள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கினர். அவர்களுடைய வளர்ப்பு முறை இவர்களின் மேதைத் தன்மைக்கு வித்திட்டது. நீல்ஸ் போர் முதலில் தனது ஏழாம் வயதில் கேமல்ஹாம் இலத்தீன் இலக்கணப் பள்ளியில் 1903ல் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார். பின்னர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

பிறகு புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் கிறிஸ்டியான் கிறிஸ்டியான் சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் கல்வியைப் பெற்ற நீல்ஸ் போர் 1909ல் இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1911ல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார். கோபன்ஹேகனில் பல்கலைக் கழக மாணவராய் இருந்த போது மெய்யியலை தனது தந்தையின் நண்பரான ஹரால்டு ஹோப்டிங் என்பவரிடத்தும், வானவியல் கணிதவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை தோர்வாடு தீலே என்பவரிடத்தும் படித்தார். ஆனால் 1905ல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவியல் ஆய்வுப் போட்டி ஒன்றினை அறிவித்தது. அலைவுறுகிற பீய்ற்றியடிக்கும் பாய்பொருளில் ஏற்படும் பரப்பு இழுவிசை பற்றிய கொள்கை மற்றும் ஆய்வுமுறையிலான தீர்வு காணும்போட்டி இது. இந்தத் தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதற்கான தீர்வையும் கண்டார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது. இந்த ஆய்வுக் குறிப்புகள் 1908ல் இராயல் கழகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

எலக்ட்ரான் கொள்கையின் அடிப்படையில் உலோகங்களின் தன்மைகள் என்ற இவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை கருத்தியல் அடிப்படையில் இயன்றளவும் சிறப்பாகக் கருதக் கூடியதாக அமைந்துள்ளது. பிளாங்க் என்ற அறிவியலறிஞரின் கதிரியக்கத் துகள் தொகுதி பற்றிய கருத்துகளுக்கு உறுதுணையாக இவை அமைந்தன. பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள கேவன்டிஷ் ஆய்வகத்தில் புகழ்பெற்ற ஜெ.ஜெ.தாம்சன் (J.J.Thomson) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற ஆய்வுகள் இவருக்குப் பலவகையில் உதவி புரிந்தன. அதே சமயம் கருத்தியல் சார்ந்த படிப்புகளிலும் இவர் தன் கவனத்தைச் செலுத்தினார். பின்னர் 1912ல் இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் அவர்களிடம் பயின்றார். இந்த ஆய்வுச் சலையில் இவர் மேற்கோண்ட ஆய்வுகள் தீவிரமாக அமைந்தன. கதிரியக்கக் கொள்கையின் அடிப்படை ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கு வழி வகுத்தன. ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913ல் போர் ஒப்புரு (போர் மாடல்) என்னும் கொள்கையாக முன்வைத்தார். நீல்ஸ் போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய ஒளியன் ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகிர்ந்தார். இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.

1913ல் தத்துவம் சாந்த இதழ் ஒன்றில் இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ரூதர்போர்டு கண்டறிந்த அணுவின் உட்கரு பற்றிய கருத்துகளின் அடிப்படையில் இவர் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பிளாங்கின் துகள் தொகுதி எந்திரவியல் பற்றிய கருத்துகளுக்கு இவருடைய ஆய்வுகள் வழிகாட்டியதோடு மேலும் சில விளக்கங்களையும் அளித்தன. கருத்தியல் இயற்பியலில் இவருடைய கருத்துகள் இன்றளவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய ஆய்வுகள் அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தன. பின்னாளில் 1925ல் ஹெய்சன்பர்க் என்பவரின் கருத்துகளும் சேர்ந்தபின் தனிமங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளுக்கு இந்தக் கருத்துகள் தெளிவை அளித்தன. குவாண்டம் இயக்கவியல் பொருத்தமட்டில் வரி நிறமாலை ஒரு சில அனுமானதை அடிபடையாக கொண்டுள்ளது. அவை பின்வருமாறு

1. ஒரு அணு ஒரு சில தனித்தனியான ஆற்றல் மட்டங்களில் மட்டுமே இருக்க முடியும். இந்த ஆற்றல் மட்டங்களில் ஏற்படும் வேறுபாடுகளுக்கு தகுந்தவாறு மின்காந்த ஆற்றலை வெளியிடவோ அல்லது உள்ளிளுக்கவோ ஒரு அணுவால் முடியும். இந்த ஆற்றல் மட்டங்களை “நிலையான ஆற்றல் மட்டம்” ( Stationary states ) என்று அழைக்கப்படும்.

2. இந்த ஆற்றல் மாற்றங்களால் ஏற்படும் மின்காந்த அலையின் அதிர்வு ஒரு குறிபிட்ட எண் மட்டுமே! இதனை பின்வரும் சமன்பாட்டின் மூலம் அறியலாம். E2-E1= hf h = என்பது பிளாங் மாறிலி f = மின்காந்த அலையின் அதிர்வெண் இந்த உள்ளார்ந்த அறிதல் அன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

1913ல் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுகள் பற்றிய சொற்பொழிவுகளை மேற்கொண்டார். இதே போன்ற பணியை 1914- 16ல் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்திலும் மேற்கொண்டார். 1926ல் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் கருத்தியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1920 இலிருந்து இவருடைய இறுதிக்காலம் 1962 வரை அப்பல்கலைக்கழகத்தில் இவருக்காகவே நிறுவப்பட்ட கருத்தியல் இயற்பியல் நிறுவனத்தில் (Institute for Theoretical physics) தலைவராக இருந்து செயல்பட்டார். அணு அமைப்பு பற்றிய இவருடைய எடுகோள்கள் 1922ல் இவருக்கு உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசியைப் பெற்றுத் தந்தன. 1930 இலிருந்து இவருடைய ஆய்வுகள் அணுவின் உட்கரு அமைப்பு பற்றியும், அவற்றில் ஏற்படும் பொருள் நிலைமாற்றங்கள் மற்றும் சிதைவுகள் பற்றியே அமைந்தன. அணுவின் உட்கருப் பகுதியின் மிகச் சிறிய அமைப்பில் ஏற்படும் உட்கரு விசை பற்றியும், அதனால் ஏற்படு விளைவுகள் பற்றியும் இவர் பலவிதமான விளக்கங்களை தரமான வகையில் அளித்தார்.

திர்வத் துளி மாதிரி அமைப்பு இந்த வகை அணுவின் உட்கருவிற்கு ஒரு முழு வடிவத்தைத் தந்தது. இந்தத் திரவத்துளிக் கொள்கை அணுவின் உட்கருப் பிளவு ஏற்படும் தனமையினைப் புரிந்துகொள்ள உதவியது. 1939ல் ஹான், ஸ்ட்ராமேன் என்ற இருவர் யுரேனியத்தில் ஏற்படும் பிளவைக் கண்டறிந்த போது பிரிஷ், மெயிட்னர் போன்றவர்களின் கருத்தியல் ஆய்வுகளுக்கும் நீல்ஸ்போரின் கருத்துகள் மிகவும் உதவியாயிருந்தன. நீல்ஸ்போரின் ஆய்வுகள் கிட்டதட்ட 115 புத்தகங்களாக வெளியிடப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது என்மார்க் நாசிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனால் நீல்ஸ் போர் சுவீடன் நாட்டிற்குத் தப்பியோடினார். அங்கு இரண்டு ஆண்டுகள் அணு ஆற்றல் திட்டம் பற்றிய ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அணு இயற்பியலை அமைதி வழியில் பயன்படுத்துவது, அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார். நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திறந்த மனதுடன் செயல் பட்டார். 1950ல் இவருடைய இக்கருத்துகள் “ஐக்கிய நாடுகளுக்கு ஒரு திறந்த கடிதம்” (Open letter to the United Nations) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.

இவருடைய இறுதிக் காலத்தில் மூலக்கூறு உயிரியலில் இவருடைய கவனம் திரும்பியது. இது குறித்த இவருடைய கருத்துகள் இவருடைய மறைவுக்குப் பிறகு “Light and Life Revisited ” என்ற நூலாக வெளியிடப்பட்டது. பல நாடுகளைச் சேர்ந்த ராயல் கழகங்களில், அவற்றின் உறுப்பினராகச் செயல்பட்டார். இவரைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வ்கையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய உருவம் பொறித்த (அந்நாட்டு மதிப்பில்) பணநோட்டும் வெளியிடப்பட்டன. இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர். அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார். நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் என்றிக் டேவிட் போர் நவம்பர் 18, 1962ல் தனது 77வது அகவையில் கோப்பனாஃகன், டென்மார்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..