தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவன உயர் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுரண்டை சிவகுருநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் சிறிய டவர் அமைப்பதாக கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை நடந்து வந்தது. இந்த செல்போன் கோபுரத்தில் சுற்றுபுறச்சூழல் மாசுபடும், அதிகளவு கதிர் வீச்சு ஏற்படுவதால் மனித உயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும் என கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு இரவு பகலாக வேலை நடந்து வந்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கூடி செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் வீகே புதூர் தாசில்தார் முருகு செல்வி மற்றும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் ஆலோசனையின் படி எஸ்ஐ ஜெயராஜ், ஆர்ஐ மாரியப்பன், விஏஓ டெல்பின் சோபியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் பொதுமக்களுக்கு எதிரான பொதுமக்கள் நலனை பாதிக்கும் திட்டங்களை நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.