ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மிளகு, மஞ்சள் கடத்த உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மண்டபம் மெரைன் போலீசார் வேதாளை கடற்கரை விரைந்தனர். அப்போது குஞ்சார்வலசை பகுதியில் இருந்து வேதாளை கடற்கரை வழியாக சரக்கு வாகனம் வந்தது. அந்த வாகனத்தை நிறுத்திய மெரைன் போலீசார் ஓட்டுநரிடம் விசாரித்தனர். ஓட்டுநர் முரணான பதிலால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 34 மூடைகளில் தலா 30 கிலோ வீதம் சமையல் மஞ்சள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சத்தியமங்கலத்தை சேர்ந்த வாகன ஓட்டுநா லோக வெங்கடேஷ் 33, வேதாளை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ரியாஸ் 36 ,சகிபுல்லா 40 ஆகியோரை கைது செய்தனர். 34 பண்டல்களில் இருந்த ஒரு டன் சமையல் மஞ்சளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மெரைன் ஆய்வாளர் கனகராஜ் கூறியதாவது: இலங்கைக்கு நறுமண பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மண்டபம் மெரைன் போலீசார் வேதாளையில் ஆயிரம் கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தோம். கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சையில் மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கிலோ ரூ.95 க்கு விற்கப்படும் மஞ்சள், இலங்கையில் கிலோ ரூ.3,500 வரை விலை போகிறது. இதையறிந்த கடத்தல் கும்பல் ஈரோட்டில் இருந்து கிலோ கணக்கில் மஞ்சள் வாங்கி இருப்பு வைத்து மர்மப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கினர். மஞ்சளை கொடுத்து விட்டு அத்தொகைக்கு நிகரான தங்கம் கடத்தி வர இக்கும்பல் திட்டமிட்டிருந்தது தெரிந்தது என்றார்.
7
You must be logged in to post a comment.