திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவை காணொலி மூலமாக 3500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் முதல் முறையாக வெற்றிகரமாக நடத்திக் காட்டி, வரலாற்றில் முத்திரை பதித்த தி.மு.க. தலைவர் அருமைச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் பொதுக்குழுவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக அருமை நண்பர் திரு துரைமுருகன் அவர்களும், பொருளாளராக அன்புச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன் அவர்கள் மாணவர் பருவத்திலிருந்தே பேரறிஞர் அண்ணா அவர்கள் பாசறையில் கூர்தீட்டப்பட்டவர்.
ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசியல் பயணத்தில் தோன்றாத் துணையாக இருந்து கழகத்தை வழிநடத்தியதில் முக்கியத் தளகர்த்தவர் ஆவார். நீண்ட நெடிய சட்டமன்ற அனுபவமும், ஆட்சித் துறையில் சிறந்த நிர்வாகியாகவும் தொண்டாற்றியவர்.
தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று நிலையில், திராவிட இயக்கத்திற்கு நாலா திசையிலும் எழுந்திருக்கின்ற அறைகூவல்களை முறியடிக்க உறுதி கொண்டுள்ள நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு. கழகத்தின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி, உயர்ந்தவர்.
நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும் பெற்றுள்ள அவர் பொருளாளர் பொறுப்பேற்றதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர்கள் முனைவர் க.பொன்முடி மற்றும் ஆ.ராசா ஆகியோருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
10.09.2020
You must be logged in to post a comment.