இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிபட்டினம், சேதுக்கரை, வாலிநோக்கம் போன்ற புண்ணிய மற்றும் சுற்றுலா தலங்களாக உள்ளன. மேலும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் உள்ள மாவட்டமாகவும் விளங்கிகின்றது. மீன்புடி உள்ளிட்ட கடல் சார்ந்த தொழில்கள் நிறைந்த பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது.
கீழடியை போன்றே அழகன்குளம் கிராமத்திலும் பழந்தமிழரின் நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டு அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. அங்கு பழங்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பாண்டங்கள், தங்க அணிகலன்கள், சங்கு வளையல்கள், இரும்பு பொருட்கள் என்று 13000 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், கீழகாஞ்சிரன்குளம் , காஞ்சிரங்குடி, சித்திரங்குடி போன்ற பகுதியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் இருந்து வரும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும்,தட்பவெட்ப மாற்றத்தினாலும் இடம்பெயர்ந்து வந்து செல்கின்றன.
மேலும் நெல், மிளகாய், சிறுதானியங்கள் போன்ற விவசாயம் செய்யும் பகுதியாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புப்பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் பத்து ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.லட்சக்கணக்கான மீன்கள், டால்பின் போன்றவை செத்து மிதந்த செய்திகள் வந்தது.
இந்தநிலையில் அழகன்குளம் ஆற்றாங்கரை கிராமத்தில் மீத்தேன் எடுக்கும் பணிக்கான ஆய்வு தொடங்கியுள்ளதும். மேலும் மாவட்டத்தில் 22 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வருவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் கடல்வளம் உட்பட அணைத்து வளங்களும் அழிந்து மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலமாக இந்த மாவட்டம் மாறிவிடும். எனவே டெல்ட்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்ததுபோல் இராமநாதபுரம் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட மீனவ மண்டலமாக அறிவித்து. இராமநாதபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் எண்ணெய் எரிவாயு பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என வீரகுல தமிழர் படை ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் கூறினார்.
You must be logged in to post a comment.