கீழடி அகழாய்வு கொந்தகையில் மனித எலும்பு கூடு கண்டெடுப்பு

கீழடி 6ம் கட்ட அகழாய்வில் முதன் முறையாக மனித எலும்புகூடு முழுமையான அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக இரு மாதங்கள் நிறுத்தப்பட்ட அகழாய்வு கடந்த மே 23ம் தேதி மீண்டும் தொடங்கியது. இதில் கொந்தகையில் நான்கு குழந்தைகளின் எலும்பு கூடுகள் கடந்த ஜுலை மாதம் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுவரை கொந்தகையில் நடந்த அகழாய்வில் 14 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் நான்கில் இருந்த எலும்பு துண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் எலும்பு கூடுகளில் இருந்து ஆய்விற்காக மதுரை காமராசர் பல்கலை கழக மரபணு பிரிவு எலும்பு துண்டுகள் எடுத்து சென்றுள்ளன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக பல்கலை கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டதால் எலும்புகளின் ஆய்வு பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கொந்தகையில் மேலும் ஐந்து அடி நீளமுள்ள எலும்பு கூடு இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்பு கூடு சிதிலமடையாமல் முழுமையாக உள்ளதால் இதில் இருந்து முகத்தின் தாடை எலும்பு, பல், கால் மூட்டு உள்ளிட்டவற்றில் உள்ள செல்கள் மூலம் டிஎன்ஏ பரிசோதனை மூலம் எலும்பு கூட்டின் காலத்தை கண்டறிய வாய்ப்புள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..