மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய், விக்கிரமங்கலம், கோவில்பட்டி, கல்புளிச்சாண்பட்டி கீழப்பெருமாள்பட்டி வையத்தான் உள்ளிட்ட எட்டு கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கண்மாயாக உள்ளது.இந்த கண்மாய் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இந்த கண்மாயில் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 280 ஏக்கர் பரப்பளவை அருகில் உள்ள பட்டா நிலத்தைச் சார்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் குறைந்த அளவே நீர் தேக்கப்படுவதால் மூன்று போக நெல்சாகுபடி செய்து வந்த எட்டு ஊர் விவசாயிகள் தற்போது ஒரு போக நெல் சாகுபடி செய்வதற்கே நீர் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.மேலும் கண்மாயில் நீர் தேக்கப்படாததால் கண்மாயைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.இதனால் குடிநீர் பஞ்சமும் ஏற்ப்பட்டுள்ளது.
இதனை கண்டு அச்சமடைந்த விவசாயிகள் ஆக்கிரமிப்புகளால் பல ஏக்கர் கண்மாய் பகுதி காய்ந்து இருப்பதால் குடிநீர் மற்றும் விவசாய பணிகள் தடைபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாச்சியரிடம் புகார் அளித்த நிலையில் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.இதனால் எட்டு கிராம மக்களின் விவசாயம் மட்டுமில்லாது குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக கிராமமக்கள் வேதனை தெரிவித்தனர். அரசு தலையிட்டு கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை தேக்கினால் மட்டுமே எட்டு ஊர் மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என எட்டு ஊர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.