தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் தொடர்ந்து 3வது நாளாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழிந்து சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும்.
மேலும் குற்றாலத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குற்றாலத்தில் சீசன் காலங்களில் ஏற்படும் இந்த இதமான சூழலினால் அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்திட தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் வருகை தருவதும் வழக்கமாக உள்ளது.இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜூன் மாதத்தில் சீசன் துவங்கியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக குற்றாலம் மலைப் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் பலத்த சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் உள்ளூர் பொதுமக்களும் குற்றாலத்தில் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் குற்றாலம் அருவிகளில் குளிக்க இயலாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.