திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் பிரதான சாலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த வழியாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்விற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது முதியவர் ஒருவர் மிகவும் சிரமப்பட்டு நடந்து வருவதை அவர் பார்த்துள்ளார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி அந்த முதியவரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.அப்போது அவர், தனது பெயர் பரசுராமன் என்றும், காலில் அடிபட்டு ஊனமானதால் குச்சி வைத்து நடந்து வந்தேன். தற்போது குச்சி உடைந்ததால் நடப்பதற்கு கஷ்டமாக உள்ளது. நான் இந்த பஸ் நிலையத்தில் தான் தங்கி உள்ளேன் என்றார். உடனடியாக பரசுராமனுக்கு புதிய ஊன்றுகோல் மற்றும் தனது சொந்த பணத்தில் ரூ.5000 வழங்கி விரைவில் மற்ற உதவிகள் செய்து தருவதாக கூறினார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் கால் ஊனத்தால் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு சிரமப்பட்டு வரும் மாற்றுத்திறனாளி பரசுராமனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக புதுப்பிக்கப்பட்ட 3 சக்கர சைக்கிள், அடையாள அட்டை, வருவாய்த் துறை மூலமாக மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று வழங்கினார்.மேலும் திருவண்ணாமலை நகராட்சி அம்மா உணவகத்தில் அவரது அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக உணவு சாப்பிடவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனை பெற்று கொண்ட பரசுராமன் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செங்கம் செய்தியாளர் சரவணக்குமார்
You must be logged in to post a comment.