ஹஜ் பெருநாளை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (2/8/2020) தளர்வை அளிக்க சொல்லி தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!
கொரோனா பேரிடர் காரணமாக அரசு தொடர்ந்து பல ஊரடங்குகளை அறிவித்து வருகிறது. தற்போது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நோய் தொற்று அதிகமாக உள்ள இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அரசு சார்பாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பாக ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக முஸ்லிம்களின் குர்பானி வணக்கம் மொத்தம் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் முஸ்லிம்கள் குர்பானி நடைபெறும் நாள் என்பதால் ஊரடங்கு அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
முஸ்லிம்களின் பெருநாளை முன்னிட்டு அந்த நாட்களில் மட்டும் ஊரடங்கு கடைபிடிக்க படாது என்று மேற்கு வங்க அரசும் தெரிவித்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் தளர்வு அளிக்குமாறு தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.
சமூக விலகலை பின்பற்றி நோய் பரவல் ஏற்படாத வகையில் வீடுகளில் மற்றும் இறைச்சி கூடங்களில் குர்பானி வழிபாட்டை நடத்த முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள் என்பதையும், ஏற்கனவே அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கு இஸ்லாமிய சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றது என்பதையும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு முஸ்லிம்கள் தங்கள் குர்பானி வழிப்பாட்டை செய்வதற்கு அது தடையாகவும் இடையூறாகவும் அமையும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தளர்வை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்
இப்படிக்கு, இ. முஹம்மது, மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
You must be logged in to post a comment.