Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சிட்டுக்குருவிக்கு கூடு அமைத்து வரும் குடும்பத்தினர்…

சிட்டுக்குருவிக்கு கூடு அமைத்து வரும் குடும்பத்தினர்…

by ஆசிரியர்

சிட்டுக்குருவி சராசரியாக 16 cm நீளமுள்ளதாக இருக்கும். இப்பறவை இனம் 14 முதல் 18 cm வரை நீளமுள்ளதாகக் காணப்படுகிற ஒரு சிறிய பறவையாகும். பெண் குருவிகள் பொதுவாக ஆண் குருவிகளைவிடச் சற்றே சிறியவையாக இருக்கும்.

உலகின் பல பகுதிகளிலும் சிட்டுக்குருவி எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் சிட்டுக்குருவி ஒரு ஆபத்தின் விளிம்பில் இருக்கும் இனமாகக் கூடக் கருதப்படுகிறது.

கைபேசிகளில் இருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு உட்பட சிட்டுக்குருவிகளின் இன குறைவுக்கான பல்வேறு காரணங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. நகர்ப்புற கட்டட வடிவமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் கூடு கட்டும் இடங்களின் பற்றாக்குறையும் ஒரு காரணியாக உள்ளது.

சிட்டுக்குருவிகளுக்கு என சிறப்பு கூடு பெட்டிகளை பயன்படுத்துவதை பாதுகாப்பு நிறுவனங்கள் ஊக்கப்படுத்தியுள்ளன. சிட்டுக்குருவிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக ‘’உலக சிட்டுக்குருவி தினம்’’ உலகெங்கும் மார்ச் மாதம் 20ம் தேதி 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், பல ஆசிய நாடுகளில் சிட்டு குருவிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த சரிவு இந்தியாவில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த பறவைகள் பாதுகாக்கப்படுவதற்கு, 2012ல், சிட்டுக்குருவி தில்லியின் “மாநில பறவை” என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலும் வீடுகளில் கூடு கட்டி சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் இன்று காண்பதற்கே அரிதாகி வருகின்றன. மனிதர்கள் வாழும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் மனையுறை குருவி என்று சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகளை தானியங்கள், பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால் அதனை உண்ணும் பறவை இனங்கள் பாதிப்படைகின்றன.  நீர், நிலம், காற்று மாசுபடுவதாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் சிட்டுக்குருவிகள் நம்மை விட்டு பிரிந்து வருகின்றன.

சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு பகுதிகளில் குருவிகள் கூடு அமைத்து உணவளித்து பாதுகாத்தால் சிட்டுக்குருவிகளின் கீச்….கீச்….குரல் இனிமையை அனைவரும் கேட்டு ரசிக்க முடியும்.

இந்தியா உட்பட ஒரு சில நாடுகள் சிட்டுக்குருவிகளை காக்கும் கடமையை மக்களுக்கு அறிவுறுத்த அஞ்சல்தலைகளையும் வெளியிட்டுள்ளன.

சிட்டுக் குருவி இனத்தினை முற்றிலும் அழிந்து விடும் படி விட்டுவிடாமல் நாம் ஒவ்வொருவரும் பறவைகளுக்காக வீட்டில் கூடு வைத்து அதை பாதுகாக்க முயற்சிப்போம் என நடவடிக்கையினை தனது இல்லத்தில் தேங்காய் நாரில் ஆன கூடுகளையும், மண்பானை கூடுகளையும் அமைத்து பறவைகளுக்கான உணவும், நீரினையும் திருச்சி, புத்தூர் ,பிஷப் குளத் தெருவில் வசித்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும்  யோகா ஆசிரியருமான விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைத்து பராமரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!