சீர்காழி அருகே 5 கிராம மீனவர்கள் மீன்வளத்துறை இயக்குனரை கண்டித்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் நேற்று தனக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளார். அப்பொழுது அவர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கீழமூவர்க்கரை சேர்ந்த சுகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் வந்த மீனவர்கள் இடையே மீன்பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பு மீனவர்களும் கரை வந்து சேர்ந்த நிலையில் அவரவர்கள் ஊரில் தகராறு தொடர்பாக கூறியுள்ளனர்.இதில் கீழமூவர்க்கரையைச் சேர்ந்த மீனவர்கள் உருட்டுக்கட்டை, கற்கள், பெட்ரோல் வெடிகுண்டு உள்ளிட்டவைகளை தங்களது படகில் ஏற்றி திருமுல்லைவாசல் எல்லைப்பகுதியில் நின்றுள்ளனர். இதனை அறிந்த திருமுல்லைவாசல் மீனவர்கள் காவல்துறை மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை அழைத்து சென்றனர்.

இதனை அறியாத கீழமூவர்க்கரை மீனவர்கள் திருமுல்லைவாசல் மீனவர்கள் மீது பெட்ரோல் வெடிகுண்டு, கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர்.அப்பொழுது திருமுல்லைவாசல் மீனவர்கள் படகில் காவல்துறை இருப்பதை அறிந்த கீழமூவர்க்கரை மீனவர்கள் தங்களது படகுகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அதில் ஒரு படகு கவிழ்ந்து அதில் இருந்த 4 பேர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்றி திருமுல்லைவாசல் மீனவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திருமுல்லைவாசல் மற்றும் கீழமூவர்க்கரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு ஆதரவாக சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி சிறு தொழில் செய்துவரும் கிராமங்களான சந்திரபாடி, கொட்டாயமேடு, மடவாமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.மற்ற மாவட்டங்களில் சுருக்கு மடி வலைக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தங்களது கிராமங்களுக்கு அனுமதி வழங்காமல் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு இடையே பிரச்சினையை தூண்டுவதாகவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி சிறு தொழில் செய்யும் மீனவர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..