மதுரை அருகே கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தனிச் சிறப்புமிக்க கல்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ளது கிண்ணிமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், ஏகநாத சுவாமி மடத்தின் உள்ளே இருந்த கல்தூண் ஒன்றில் ‘ஏகன் ஆதன் கோட்டம்’ என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது இந்தக் கல்தூண்.
கல் தூண் ஒன்றில் இதுபோன்ற தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுவது மிக முக்கியமான கண்டுபிடிப்பு. காரணம் அந்த காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு கட்டிடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாக உள்ளது. அதுமட்டுமன்றி ‘கோட்டம்’ என்ற சொல் தமிழிலக்கியங்கள் அன்றி முதல் முதலாக தமிழ் பிராமி என்று அழைக்கப்படுகின்ற தமிழி எழுத்தாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.மிகப்பழமை வாய்ந்த இந்த கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டால் மேலும் சில வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வாய்ப்புண்டு எனவும் கூறினார்.
செய்தியாளா் காளமேகம் .மதுரை
You must be logged in to post a comment.