முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள் இன்று (ஜூலை 2, 1958).

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஜூலை 2, 1958ல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதாவடி கிராமத்தில் திரு.மயில்சாமி ஆசிரியருக்கும் திருமதி. பாலசரசுவதி அம்மையாருக்கும் பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முதுநிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் பெற்று, முழுக்க முழுக்கத் தமிழகத்திலேயே தனது கல்வியைப் படித்து முடித்தார்.

1982ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஒரு அடிமட்ட அறிவியல் ஆய்வராச் சேர்ந்து, தனது உழைப்பாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத் தனது பெயரைப் பதித்துள்ளார். எட்டு இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராகச் சிறப்பாற்றியதின், பின் 2004ல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார். கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்களைத் தலைமை தாங்கி நிலவில் நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு. சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள் குழுமங்களின் தலைமைத் திட்ட இயக்குனராக 2010ல் உயர்ந்தார். இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் செயற்கைகோள் மையத்திற்கு இயக்குநராக 2015 ஏபரல் முதல் 2018 ஆகஸ்ட் வரை பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராக உள்ளார்.

தனது அறிவியல் பணிக்கு வெளியில் தாய்த்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும் கொண்டவர். ‘வளரும் அறிவியல்’ என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கௌரவ ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர். மனிதநேயம் கொண்ட சிறந்த மனிதர். சனி, ஞாயிறுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓய்வு நேரங்களில் முகநூலின் மூலம் இளைய சமுதாயத்திடம் தொடர்பு கொண்டு கணிணி வாயிலாய், அறிவியல் பார்வை மற்றும் சமூகப் பணியுடன் தமிழார்வத்தையும் ஊக்குவித்து வருகிறார். இந்திய நகரங்களின் பல தமிழ்ச்சங்கங்களிலும், அமெரிக்க மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளிலும் அறிவியல் தமிழில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கோவைச் செம்மொழி மாநாட்டில் முப்பது அறிவியலாளர்களைக் கொண்டு தலைலைதாங்கி நடத்திய “அறிவியல் தமிழ் ஆய்வரங்கம்” எல்லோராலும் பேசப்பட்ட ஒன்று. இவரது இளமை, கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு அனுபவங்களடங்கிய “கையருகே நிலா” என்ற புத்தகமும், “அரசுப் பள்ளி பாழல்ல அன்னைத்தமிழும் பாழல்ல” என்ற இவரது கவிதையும் , தமிழகப் பள்ளி மாணவர்களால் அதிகம் படிக்கப்படுகிறது. தமிழகப் பள்ளி இறுதி வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இவரது வாழ்க்கைக் குறிப்பும், அறிவியல் பணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மயில்சாமி அண்ணாதுரை இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் சில பரிசுகளும் பட்டங்களும், கர்மவீரர் காமராசர் நினைவு விருது, நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள், ஐந்து முனைவர் பட்டங்கள், சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகள், ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டியூட்டின் மேல்னிலை விருது, சர்.சிவி.இராமன் நினைவு அறிவியல் விருது, ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட் விகரம் சாராபாய் அறியல் ஆய்வு விருது, கர்நாடக மாநிலஅரசின் அறிவியலுக்கான விருது, எச்.கே..ப்ரோடிய தேசிய அறிவியல் விருது, தேசிய ஏரோநாட்டிகல் அறிவியல் தொழில் நுட்ப விருது, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய அறிவியல் விருது, அமர பாரதி தேசிய அறிவியல் விருது, தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது, கொங்குச் சாதனையாளர் விருது, தமிழ் மாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கம், அறிவியல் அண்ணா, கர்நாடகா தமிழ்பேரவை, ஹுப்ளி, டாக்டர் இரஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு 2012, சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு-2013 போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

இன்று உலகமே இஸ்ரோவை வியந்து பார்ப்பதற்கு காரணம் நம் பொள்ளாச்சியை சேர்ந்த விஞ்ஞானி அண்ணாதுரை மயில்சாமியால் தான் சாத்தியம் ஆயிற்று. இவர் தலைமையில் அனுப்பட்ட சந்திராயன்-1 விண்கலம் தான் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டுபிடித்து உலகறிய செய்தது. இதனால் இந்திய விண்வெளி துறை மீது அனைத்து நாடுகளின் பார்வையும் திரும்பியது. சந்திராயன்-1 என்ற விண்கலம் கடந்த 2008 ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்ட இந்திய விண்வெளி தளத்தில் இருந்து இஸ்ரோ சார்பில் ஏவப்பட்டது. இதற்கு திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். சந்திராயன் விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளை கண்டுபிடித்தது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் உலகமே திரும்பி பார்த்தது. இதைத்தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மீது உலகத்தின் பார்வை திரும்பியது. கடந்த 2003ம் ஆண்டு நம்பவம் 5ம் தேதி மங்கள்யான் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்தப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக சேர்ந்தது. முதன் முயற்சியிலேயே செவ்வாய்க்கு வெற்றிகரமாக செயற்கைகோளை அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா.

மயில்சாமி அண்ணாதுரை ஓய்வு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றுவது. அவர்களை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அப்துல்கலாம் போலே மாணவர்களுடன் நேரத்தை செலவிடுவதால் இவரை இளைய காலம் என்று அழைக்கப்படுகிறார். தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், “கையருகே நிலா” என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில், “கையருகே செவ்வாய்” என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.

Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..