மன உளைச்சல் காரணமாக கொரோனா நோயாளி முதலாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் காலில் எலும்பு முறிவு. அடிப்படை வசதிகள் இல்லை பல கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு செல்ல முடிவு.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய பட்டதால் அவரை வீட்டிலிருந்து மகன் மற்றும் மகள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் சாலையில் திரிந்த முதியவரை சமூக ஆர்வலர்கள் இணைந்து சுகாதார துறை மூலம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட முகாமில் தங்க வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து மனமுடைந்த முதியவர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் முதியவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்தி வைத்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரியில் 350க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு சரியான குடி தண்ணீர், சாப்பாடு, மருத்துவ வசதிகள் இல்லை எனவும் குழந்தைகளுக்கு பால் கூட இல்லை எனவும் கொரோனா பாதிப்படைந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
உரிய வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகள் பலர் தங்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க கோரி அங்கிருக்கும் அதிகாரிகளை முற்றுகை இட்டுள்ளனர்.
தற்போது மதுரை மாவட்ட துணை ஆட்சியர் பிரியங்கா மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கொரோனா நோயாளிகள் மற்றும் அங்கு உள்ள அதிகாரிகளிடம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு சரியான குடிநீர் வசதி, அடிப்படை வசதிகள் பால் போன்ற அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும் என துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் உறுதிமொழி கொடுத்ததை அடுத்து கொரோனா நோயாளிகள் கலைந்து தங்களது அறைக்கு சென்றனர்.
காளமேகம், மதுரை
You must be logged in to post a comment.