ஸ்ரீவில்லிபுத்தூர் அமைச்சர் விழாவில் குழப்பம். .கோபமடைந்த அமைச்சர் வட்டாட்சியர் ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் நிகழ்ச்சி புறக்கணித்து சென்றதால் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளும் அதிர்ச்சி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்ட அரசு விழாவில் வேறு ஒரு பிரச்சினைக்காக பொதுமக்கள் அவரை சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்ததால் கோபமடைந்த அமைச்சர் நிகழ்ச்சியின் பாதியிலேயே புறப்பட்டு சென்றது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்டது வத்திராயிருப்பு தாலுகா இந்த உத்தரவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்து முதலமைச்சர் உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து புதிதாக உதயமான வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வத்திராயிருப்பு பேருந்து நிலையம் அருகே மூன்றரைக் கோடி ரூபாயில் சுமார் 12000 சதுர அடி பரப்பளவில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பூமி பூஜையை முறைப்படி துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் மரம் நடுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே புதிதாக அமைய உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒரு பிரிவினர் தங்கள் சமுதாய கோவிலை கட்டி வந்துள்ளனர். அவ்வாறு கோவில் கட்டும் போது பல லட்சம் மதிப்பிலான சுமார் 20 சென்ட் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக தெரிகிறது. இது குறித்த விபரம் எதையும் அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவிக்காததால் நிலத்தை ஆக்கிரமித்து உள்ள ஒரு பிரிவினர் அமைச்சர்களை முற்றுகையிட்டு தங்களுக்கு இந்த நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்கும்படி வற்புறுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.
தொடர்ந்து பதற்றம் அதிகரிக்கவே அதிக அளவு போலீஸ் குவிக்கப்பட்டது. இதனால் எரிச்சலடைந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் இருவரும் வட்டாட்சியர் ராமதாஸ் ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் நிகழ்ச்சியை புறக்கணித்து வேகமாக தங்களது வாகனத்தில் ஏறி இடத்தை விட்டு வெளியேறினர்.இதை சற்றும் எதிர்பார்க்காத வட்டாட்சியர் தானே மரக்கன்றுகளை நட்டு அப்பகுதியில் இருந்து வெளியேறினார். வட்டாட்சியர் மீது கோபம் கொண்டு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியேறிய சம்பவம் அரசு அதிகாரிகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.