இராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தளவாய்புரம் போலிசார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சார்ந்த புதிய தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மூன்று மாதம் கழித்து அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இதற்கிடையில் அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இன்று காலை சக்திவேல், தர்மராஜ் அண்ணன் – தம்பி இருவரும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் மண்வெட்டி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் இருவரும் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் விழுந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை முதலுதவிக்காக போலீசார் தங்கள் வாகனத்தில் வைத்து இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில் குற்றவாளிகள் அருகே உள்ள கண்மாயில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் போலீசார் சினிமா காட்சியை மிஞ்சும் அளவிற்கு இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்றனர். ஆனால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பித்து சென்ற நிலையில் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் படுகாயமடைந்த இருவரையும் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தர்மராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். பழிக்கு பழி வாங்கும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.