காரப்பட்டு பகுதியில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கிணறு தோண்டும் பணி தொடங்கியது..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதியில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு அடிக்கடி செங்கம்-போளூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுவந்தனர்.
இதனால் புதிதாக ஊராட்சிமன்றத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயந்தி லட்சுமணன், இந்தக் குடிநீர் பிரச்னையைப் போக்க தனது கிராமத்தில் குடிநீர் கிணறு தோண்டுவதற்குப் பணி ஆணை வழங்க வேண்டுமென என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் லட்சுமியிடம் ஒப்புதல் பெற்று காரப்பட்டு ஏரிக்கரை அருகே 10 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான சுமார் 16 மீட்டர் ஆழமும் 4 மீட்டர் அகலமும் கொண்ட புதிய கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அப்போது அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள், கிணறு தோண்டும் பணியின்போது ஊராட்சிமன்றத் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் லட்சுமி, செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து செங்கம் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்போடு கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.
தங்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, புதிய கிணறு தோண்டும் பணிக்கு அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், இதற்கு முழுமையாக ஒத்துழைத்த அனைத்து அலுவலர்களுக்கும் அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.