திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா? பக்தர்கள் ஏக்கம்…
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று தான், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் திருக்கோவில். இந்த கோவிலின் ராஜகோபுரம் தான் அரசு முத்திரையாக உள்ளது.
தமிழக திருவிழாக்களில் மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியத்திருவிழாவாக இருப்பது போல, ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டமும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
தோரோட்ட நிகழ்ச்சிக்கு நாற்பத்தெட்டு நாட்களுக்கு முன்பாக, தேருக்கு முகூர்த்த நாள் பார்த்து பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். முகூர்த்தக்கால் வைத்த தினத்திலிருந்து, தேருக்கு தொடர் பூஜைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தேரோட்டத்திற்காக தேரை அலங்காரம் செய்யும் பணிகளும் நடைபெறும்.
இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்டம், வரும் ஜுலை மாதம் 24’ம் தேதி (ஆடி மாதம் 9’ம் தேதி) நடைபெற வேண்டும். ஆனால் இது வரை அரசிடம் இருந்து, தேரோட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியது, வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோவில்கள் அனைத்தும் இன்னும் திறக்கப்படவில்லை. பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், பூஜைகள் மட்டும் வழக்கம் போல நடைபெறுகிறது. இது வரை தேரோட்டம் நடத்துவதற்கான அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆடிப்பூரம் திருநாளுக்கு இன்னும் ஐந்து வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது எனக்கூறினார்.
இந்த ஆண்டு ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.