தென் கொரியாவுடனான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டுடனான எல்லை அலுவலகத்தை வட கொரியா அதிரடியாக தகர்த்துள்ளது..
கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே அமெரிக்கா – வட கொரியா தலைவர்கள் இடையேயான சந்திப்புக்கு தென் கொரியா முக்கிய பங்கு வகித்ததால், இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தணிந்திருந்தது. மேலும் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு எல்லையில் தகவல் தொடர்பு அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வட கொரியாவில் இருந்து தப்பி தென் கொரியா வந்துள்ள வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட கொரிய அரசை விமர்சிப்பது தொடர்பான துண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் தற்போது வடகொரியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜங், நாங்கள் தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், தென் கொரியாவுடனான உறவை மொத்தமாக துண்டிக்கும் நேரம் வந்து விட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் தென் கொரியா மீது எப்படி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில், கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் உள்ள இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிகளுக்குள் தங்கள் ராணுவத்தை அனுப்ப, ஒரு செயல்திட்டத்தை ஆராய்ந்து வருவதாக வட கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த தடாலடி நடவடிக்கை தற்போது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
You must be logged in to post a comment.