தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் ரவுடிகள் கலாச்சாரம்;சிறு வணிகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவுடிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்:-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!

தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் ரவுடிகள் கலாச்சாரம்;சிறு வணிகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவுடிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்:-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் ஈ.சி.ஆர் சாலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் கிளைத் தலைவர் சபீர் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகின்றார். இன்று (13/06/2020) அந்த கடைக்குச் சென்ற சில ரவுடிகள் அவரிடம் பணம் கொடுக்காமல் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளார்கள்.

காசு கொடுக்காமல் பிரியாணி தர மாட்டேன் என்று சபீர் சொல்ல, ‘நாங்கள் யாரென்று தெரியுமா எனக்கேட்டு மேலும் சில குண்டர்களை அங்கே வரவழைத்து அவரது பிரியாணி கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றிணைந்து சகோதரர் சபீர் மீது இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை, பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு மிகக் கடுமையாக தாக்கி அவரது கழுத்தில் வெட்டியுள்ளார்கள். அதுமட்டுமின்றி அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கியதில் சமீருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கழுத்தில் வெட்டுப்பட்டதால் அவருக்கு ஒன்பது தையல்கள் போடப்பட்டு தற்போது திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக சிறு வணிகர்கள் கடை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற ரவுடிகள் உள்ளே புகுந்து கடையை நாசம் செய்து வணிகர்களை அடித்து, உதைத்து கொலை வெறித்தாக்குதல் நடத்தி பணம் பறிக்கும் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.

பொருளை வாங்கிவிட்டு அதற்கு பணம் கொடுக்காமல் ரவுடியிசத்தை காட்டும் குண்டர்கள் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக மறைந்து போயிருந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் ரவுடிகள் கலாச்சாரம் தலைதூக்கி இருப்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியிருக்கின்றது.

இதுபோன்ற ரவுடிகள் கடைக்காரர்களை மிரட்டி பணம் பறித்தல், பொருட்களை பறித்தல் போன்ற காரணத்தால் தமிழகத்தில் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாச்சிகுளத்தில் பிரியாணி கடைக்காரர் சபீர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரது கடையை அடித்து உடைத்து நொறுக்கிய இந்த சம்பவத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியிருக்கும் இந்த சூழ்நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் மீண்டும் குண்டர்கள் கலாச்சாரம் தலைதூக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்தக் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட இந்த ரவுடிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..