ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது அக்கா சித்திரா என்பவரை அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகைசெல்வம் என்பவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சித்திராவுக்கும் கார்த்திகைசெல்வத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (03/06/2020) மாலை ரெங்கபாளையத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில், முருகேசனுக்கும், கார்த்திகை செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறிய நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த கார்த்திகை செல்வம் கத்தியால் முருகேசனின் நெஞ்சில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திகை செல்வனை தேடி வந்த நிலையில் இன்று காலை கார்த்திகை செல்வனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.