விருதுநகர் மாவட்ட பேருந்து போக்குவரத்து தொடர்பான வழிகாட்டுதல்கள்;மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்திற்குள்ளேயும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட பேருந்து வழித்தடங்களில் 60 சதவீத இருக்கைகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
குளிர் சாதன பேருந்துகள் இயக்க அனுமதியில்லை ஒவ்வொரு பேருந்திலும் பயணிகள் அமரும் இருக்கை மற்றும் சமூக இடைவெளிக்காக ஒதுக்கப்படும் இருக்கை எனத் தனியே குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் ஒவ்வொரு டிரிப் முடிந்தபின்பும் பேருந்தில் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பேருந்தின் இரு பக்க வழிகளிலும் பயணிகளுக்காக உரிய முறையில் சானிடைசர்கள் பொருத்த வேண்டும்.
பேருந்து பணியாளர்கள் அனைவரின் உடல் வெப்பநிலையும் தினந்தோறும் பணி துவங்குவதற்கு முன் தினசரி பரிசோதனை செய்ய வேண்டும். பேருந்து பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் சானிடைசர்கள் வழங்க வேண்டும், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் ஏற்றக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இருக்கைக்கு மேல் கூடுதல் பயணிகளை பேருந்தில் ஏற்றக் கூடாது. மேலும் இருமல், காய்ச்சல் உள்ள பயணிகளை பேருந்தில் ஏற்றக் கூடாது. இதை அரசு மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை
கடைபிடிக்காத பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கையும் தொடரப்படும். இவ்வாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்து உள்ளார். மேற்சொன்ன வழிகாட்டுதல்கள்படி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை முதல் 50%அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 8 பணிமனைகளில் மொத்தமுள்ள 429 பேருந்துகளில் 131 நகர பேருந்துகள் மற்றும் 89 புறநகர் பேருந்துகள் மொத்தம் 220 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.