அரசின் ஆணையை மதிக்காமல் சுய உதவிக்குழு பெண்களிடம் கடன்தொகை கேட்டு மிரட்டும் தனியார் நிதிநிறுவனங்கள்:நடவடிக்கை கோரி இளஞ்சிறுத்தைகள் மனு..
கொடிய கொரோனா தொற்றை தடுத்திட அரசு ஊரடங்கு உள்ளிட்ட தொடர் முடக்கத்தை நாளுக்குநாள் நீட்டித்து வரும் நிலையில் மக்கள் முற்றிலுமாக வேலைவாய்ப்பை இழந்து பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக விளிம்புநிலை மக்கள், சுயஉதவிக்குழு பெண்கள் வாழ வழியின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் பசி பட்டினியை போக்கிட மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு மேலெழுந்தாலும்கூட தனியார் நிதிநிறுவனங்கள், வங்கிகள் மூலம் பெற்ற கடனை திருப்பிச்செலுத்திவதிலிருந்து 6-மாதகாலம் அவகாசம் வழங்கியிருப்பதை சற்று ஆறுதலாகவே பார்க்க முடிகிறது.
ஆனால் அரசின் இந்த அறிவிப்பை பின்பற்றாமல் குறிப்பிட்ட வங்கிகள், விவசாயக்கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன், செல்போன் கடன் தவணை தொகைகளை வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கிலிருந்து பறிமுதல் செய்வதும், பணம் செலுத்தாதவர்களுக்கு அநியாய அபராத வட்டியை திணிப்பதுமான நடவடிக்கைகளை தொடர்கிறது.
மிகக் குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் நிதிநிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மூலம் தற்போது வீடு வீடாகச் சென்று பெண்களை பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.
இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அரசு நிர்வாகங்கள் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வாக்களித்த மக்களுக்கு வாக்கரிசி போட முனையும் செயலாகும்.
தவணை ஒத்திவைப்பு என்பது சலுகையாகாது. 6-மாதம் கழித்து வட்டிக்கு வட்டி சேர்த்து கட்டவேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே தவணை ஒத்திவைப்பு அறிவிப்பையாவது அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
இந்நிலையில் திருச்செந்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுயஉதவிக்குழு பெண்களை தவணை தொகை கட்டச்சொல்லி மிரட்டும் தனியார் நிதிநிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர்.
விடுதலைச்சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் இராவணன், மாதவன், சுந்தர், அருண் ஆகியோர், உடனிருந்தனர்.
நம்மிடம் பேசிய மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் கூறியதாவது,
திருச்செந்தூர் வருவாய் கோட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுமெனில் பாதிக்கப்படும் பல்வேறு பகுதி சுயஉதவிக்குழு பெண்களை ஒருங்கிணைத்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்பதை அரசின் கவனத்திற்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
You must be logged in to post a comment.