அனைத்து மாவட்டங்களிலும் வக்பு குழுக்கள் அமைக்க அறிவிப்பு முறையற்றது. நவாஸ்கனி எம்பி அறிக்கை.

தமிழக அரசு வக்பு வாரியத்தை கலைத்துவிட்டு நெடுநாட்களாக தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வக்பு குழுக்களை அமைக்க அறிவித்திருப்பது முறையற்றது என இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்டு மீண்டும் முறையாக அமைக்கப்படாமல், வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள போது, தற்போது திடீரென அனைத்து மாவட்டங்களிலும் வக்பு குழுக்களை அமைக்க தமிழ்நாடு வக்பு வாரியம் முடிவு செய்துள்ளதாக செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது.இந்நடவடிக்கை முறைகேடுகள் ஏற்பட வழி வகுக்கும் என சந்தேகம் ஏற்படுகிறது.தமிழக அரசு எதற்காக வக்பு வாரியத்தை அமைக்க தயங்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது.ஒரு தன்னாட்சி அமைப்பை அரசு தனி அதிகாரி மூலம் மட்டுமே ஆறு மாதத்திற்கு மேலாக இயக்கி வரும் சூழலில்,மீண்டும் வாரிய தலைவர், வாரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாத சூழலில் மாவட்ட வாரியாக புதிய வாரிய குழுக்களை அமைக்க முடிவு எடுத்திருப்பது முறையற்ற செயல்.இதனை உடனடியாக அரசு கைவிடவேண்டும்.இத்தகைய நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, வாரியத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை உடனடியாக தேர்ந்தெடுத்து, அதிகாரப்பூர்வ வக்பு வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..