தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் இல்லை – உலக தேனீக்கள் தினம் (மே 20).

2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ஜானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. ஸ்லோவேனியாவில் தேனீ வளர்ப்பவர்களின் குடும்பத்தில் இருந்து ஜனியா வந்தார். அங்கு தேனீ வளர்ப்பு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு முக்கியமான விவசாய நடவடிக்கையாகும். ஸ்லோவேனியா இப்போது ஒரு தேனீ சுற்றுலாத் துறையை உருவாக்கி வருகிறது. நமது உணவில் குறைந்தது 30% மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் (அல்லது பிற மகரந்தச் சேர்க்கை பூச்சிகள்) தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தேனீக்கள் இல்லாமல் பாதாம், ஆப்பிள், பேரிக்காய் மற்றும் குயின்ஸ் உருவாகாது. அவகோடா பழம் மற்றும் அனைத்து சிட்ரஸைப் போலவே ஸ்ட்ராபெர்ரி மற்றும் அவுரிநெல்லிகள் போன்ற பல பெர்ரிகளுக்கு மகரந்தச் சேர்க்கைகள் தேவை. பல காய்கறிகள் தேனீக்களைச் சார்ந்தவை. குறிப்பாக வெள்ளரி, பூசணி மற்றும் சீமை சுரைக்காய் போன்ற ஆண் மற்றும் பெண் பூக்கள் கொண்டவை, உணவு பாதுகாப்பு தேனீக்களைப் பொறுத்தது.

சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன. இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதே ஆண் தேனீக்களின் செயலாகும்.

லரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, குடம்பிகள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது. இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் மலரின் குளுகோஸ் வேதியியல் மாற்றத்துக்கு உட்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. தேனீக்கள் ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. தங்கள் கூட்டைக் காக்கும் போராட்டத்தில் இவை உயிரைத் தியாகம் செய்கின்றன. தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும்.

இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளது. ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள். முட்டை இடுவது ஒன்றே அரசித்தேனீயின் முக்கியமான பண்பாகும். அரசித் தேனீ இல்லையென்றால் மற்ற பணிசெய் தேனீகள் மிகவும் குழம்பிப்போய், தமது கட்டுக்கோப்பான சேர்ந்து வாழும் பண்பை இழக்கின்றன. அரசித் தேனீயானது, பணி செய்யாவிட்டாலும், எல்லாத் தேனீக்களையும் ஈர்த்து ஓர் ஒழுங்கில் இருக்க உதவுகின்றது. தாவர இனப்பெருக்கத்தில் தமது பங்கை வழங்குவதுடன், தேனீக்களால் சேகரிக்கப்படும் மேலதிக தேன் மக்களின் பயன்பாட்டுக்கு வருகின்றது. தேனீக்கள் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தச்சேர்க்கையில் முக்கியமான பங்களிப்பை வழங்குவதால், மனிதர்களின் உணவுச் சங்கிலியில் தேனீக்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. அண்மைய காலங்களில் தேனீக்கள் அழிந்துவருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு துரோகம்அளிக்கும் எந்த செயலையும் செய்யாமல் இருப்பதே நல்லது.

உலக தேனீ தினமான இன்று, தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு அது செய்யும் சேவை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக தேனீ பூக்களில் இருந்து தேனை எடுக்கிறது என்றாலும், அதன் மூலம் அதிகம் பயனடைவது என்னவோ மனிதகுலம்தான். தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட உதவுவதோடு, அது மருத்துவ பொருளாகவும் திகழ்கிறது. பூக்களிலிருந்து தேனை எடுக்கும் நேரத்தில் அவற்றின் காலில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம், வெவ்வேறு பூக்களில் மாறி மாறி அமரும்போது, பரவுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இதனால் பூக்கள் மலர, பூகோளமும் மகிழ்கிறது. அந்த வகையில் தேனீ பசுமையின் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இப்படி மனித குலத்தின் நண்பனான தேனீ, தற்போது அழிந்து வரும் உயிரினமாக மாறிவருவதற்கு நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் காரணமாகிக்கொண்டிருக்கின்றன.

இப்போது அதிக தொழில்மயமாக்கப்பட்ட விவசாயத்துடன், தேனீக்கள் பன்முகத்தன்மை இல்லாமை மற்றும் அதிக நச்சு இரசாயனங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. பல்லுயிர் பற்றாக்குறை என்றால் தேனீக்கள் ஒன்று அல்லது இரண்டு தாவர இனங்களை மட்டுமே நம்பியுள்ளன. மேலும் அந்த பயிர் தோல்வியுற்றால் இது முழு காலனிகளையும் அழிக்கக்கூடும். காலநிலை மாற்றம் என்பது தேனீக்களுக்கு எப்போதும் இருக்கும் அச்சுறுத்தலாகும். வெப்பநிலை அதிகரிக்கும் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் மிகவும் பொதுவானதாக மாறும் போது, தேனீக்கள் பெருகிய முறையில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன. நோயால் பாதிக்கப்படுகின்றன, உண்மையில் அவை உயிர்வாழ போராடுகின்றன.

தேனீக்களின் சுறுசுறுப்புக்கு மனிதனாலும் ஈடு கொடுக்க முடியாது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். பூச்சிக்கொல்லிகளால் நீங்கள் அழிக்க நினைக்கும் பூச்சிகள் இறப்பது மட்டுமன்றி மகரந்தத்தை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம், விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை முறையை உரங்களை கடைபிடிக்கலாம். உதாரணமாக பூண்டு, வெங்காயம், உப்பு, மிளகாய், மிளகு, சோப், சிட்ரஸ் பழங்கள் என இவற்றின் சாறுகளை ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.

தேனீக்கள் நுகர்வதற்கு ஏற்ற பூச்செடிகளை வளர்க்க முற்படுங்கள். இதனால் அவை பெருக ஆரம்பிக்கும். தேனீக்களின் வேலையும் இடைவிடாது நடக்கும். வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு தேனீக்களின் நன்மைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். அதன் வளர்ப்பு, அதன் தேவையின் முக்கியதுவத்தை உணர்த்துங்கள். இதனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையும் இதைக் கற்றுக்கொண்டு வளர்க்க, பாதுகாக்க முன்வருவார்கள். பல இடங்களில் தேனீக்கள் கூடு கட்ட அதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தருகின்றார்கள். அப்படி நீங்களும் தேனீக்கள் சூழ உதவுங்கள். இதற்காக உலகம் முழுவதும் பல அமைப்புகள், குழுக்கள் இருக்கின்றன. நீங்களும் குழு அமைத்து தேனீக்களை பாதுகாக்கலாம். அதனால் நன்மையும் அடையலாம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..