மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்புகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்புகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்..

மத்திய அரசின் விவசாயிகளுக்கான கடன் மற்றும் சுயசார்பு திட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில்,கொரோனா ஊரடங்கால் பொருளாதார இழப்பினை மீட்டெடுக்க சுயசார்பு இந்தியா திட்டம் மூலம் பிரதமர் மோடி ரூ 20 லட்சம் கோடிக்கான திட்டத்தை அறிவித்தார். இதனையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 5 கட்டங்களாக பிரித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

விவசாய மேம்பாட்டிற்கு கடன் குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டார். ஏற்கனவே விவசாயிகள் பெற்ற வராக்கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். கடன் கொடுக்கும் அளவை உயர்த்துவதாக அறிவித்தார்.

குறிப்பாக நபார்டு மூலம் உடனடி கடன் வழங்க ரூ30 ஆயிரம் கோடி என்று அறிவித்தார் இது மோசடி அறிவிப்பாகும், காரணம் ஏற்கனவே 2015ம் ஆண்டு முதல் வறட்சி,வர்தா,தானே,ஓக்கி, கஜாபுயல்கள் தாக்குதல்களால் 2018ம் ஆண்டு வரை உற்பத்தியை இழந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடன் நெருக்கடியால் தற்க்கொலை செய்து கொண்டு பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தாக்குதலால் இந்தியா முடங்கி உள்ள நிலையில் காய்கனி உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் 80% முற்றிலும் உற்பத்தி செய்த நிலத்திலேயே அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணெதிரிலேயே அழிந்துள்ளது. இதனை பார்த்து மனமுடைந்து செய்வதறியாது முடங்கி உள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இழப்பிற்கு நிவாரணம் வழங்கி, நிலுவை கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்வார்கள் என எதிர் பார்த்தோம் ஆனால் மறுத்து விட்டனர்.

கொரோனா மட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகள் தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் விவசாயம் அழிந்ததால் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் புதிய கடன் பெறுவதற்கான தகுதியை 80% விவசாயிகள் இழந்துள்ளனர்.

இந்நிலையில் புதிய கடன் கொடுப்பதற்கு தொகையை உயர்த்துவதால் எந்த பயனுமளிக்காது. விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும் வாய்ப்பை உருவாக்குவோம், குறைந்தபட்ச விலை குறித்து கண்காணிக்க சட்ட அங்கீரத்துடன் கூடிய அமைப்பு உருவாக்கப்படும், மாநிலங்களுக்கிடையே பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் முழுமையும் நீக்கப்படும், ஏற்றுமதி செய்ய உரிய அனுமதி வழங்கப்படும், கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும், கொள்முதல் செய்வதற்ககென்று நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார்கள்.

இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக எண்ணி வரவேற்றோம். ஆனால் முடிவில் ஆன்லைன் வர்த்தகம் அனுமதிக்கப்படும் என அறிவித்ததால் ஒட்டுமொத்தமாக அறிவித்த அனைத்து சலுகைகளும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள், மீத்தேன் எரிவாயு கிணறுகள் அமைக்க தனியாருக்கு உடனடியாக அனுமதி வழங்குவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் செய்வதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ள நிர்மலா சீத்தாராமன் அவர்களின் அறிவிப்புகள் அனைத்தும் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று எண்ணத் தோன்றுகிறது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் ஒட்டு மொத்தமாக கார்ப்பரேட்டுகளை களமிறக்குவதற்கு கொரோனாவை சந்தர்ப்பமாக பயன்படுத்தி இந்தியாவை கூறு போட்டு விற்பனை செய்யும் மோசடியில் மோடி அரசு ஈடுபடுவது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே நிர்மலா சீத்தாராமன் அறிவிப்புகளை மறுபரிசீலினை செய்ய வேண்டும்.

விவசாயிகள் கடன் நிலுவை முழுவதும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். மறு உற்பத்திக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். அழிந்துள்ள காய்கறி, பழவகைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்திட வேண்டும். உற்பத்திக்கும், சந்தைப்படுத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

விளை நிலங்களில் பேரழிவு திட்டங்கள் அனுமதிப்பதை கைவிட வேண்டும்,இவ்வாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..