சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூரகாரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்:-அபுபக்கர் MLA
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையைச் சார்ந்த சிறுமி ஜெயஸ்ரீயை அதே கிராமத்தைச் சார்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகிய இருவரும் கை கால்களை கட்டி, வாயில் துணி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் அளித்திருக்கிறது.
உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய சிறுமி ஜெயஸ்ரீ இறந்துவிட்டார் என்ற துயர செய்தி அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமியின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற கொடூரங்களுக்கு உச்ச பட்ச தண்டனையை வழங்குவதின் மூலமாகவே இன்னொரு சம்பவம் நடக்காது இருக்க வழிவகை செய்ய முடியும்.
ஏற்கனவே கோவை வேளாண் கல்லூரி மாணவியினர் மூவருக்கு தர்மபுரியில் நடந்த கொடூரம், பொள்ளாச்சி பாலியல் குற்றம் என அழிக்கமுடியாத அவமானங்களை சுமந்திருக்கும் சூழலில்,
சட்டத்தின் பிடியில் மிகக்கடுமையாக இந்தக் கொடூரர்கள் மீது சட்டம் பாய்ந்தால் மட்டுமே, தமிழகத்திற்கென்று இருக்கும் கண்ணியத்தை பாதுகாக்க முடியும்.
எனவே ஆளும் அரசாங்கம் நடுநிலையோடு, மனிதத்தோடு, மற்றுமொரு சம்பவம் நடக்காது இருக்குமாறு உறுதிசெய்ய, இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எந்தவித தயவு தாட்சண்யம் இல்லாமல் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
You must be logged in to post a comment.