2020-21-ம் நிதியாண்டில் ரூ.38.79 கோடி மதிப்பீட்டில் 61 கண்மாய்களில் புனரமைப்புப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தகவல்..

குடிமராமத்து திட்டத்தின் கீழ்  2020-21-ம் நிதியாண்டில் ரூ.38.79 கோடி மதிப்பீட்டில் 61 கண்மாய்களில்  புனரமைப்புப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தகவல். முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், ஆனைகுடி கிராமத்தில் உள்ள கண்மாயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் சம்பந்தப்பட்ட  ஆயக்கட்டுதார விவசாயிகள் நலச்சங்க உறுப்பினர்களுடன் முன்னேற்பாடு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் இன்று  (12.05.2020) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: நீர்நிலைகளை பாதுகாத்திடவும், மழைநீரை சேமித்து  நிலத்தடி நீர் அளவினை மேம்படுத்திடவும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கண்மாய்களில்  விவசாயிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட  கண்மாய்களின் பாசன விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டு கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல்,  மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம், கழுங்குகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம்,  வரத்துக்கால்வாய்களை தூர்வாருதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் இதர பணிகளை பாசன  சங்கங்களின் மூலம் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்போடு சம்பந்தப்பட்ட விவசாய சங்கங்களின் மூலமே  நியமன முறையில் பணிகளை மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.10.06 கோடி மதிப்பில் 14 கண்மாய்களிலும்,  2017-18ம் நிதியாண்டில் ரூ.29.55 கோடி மதிப்பில் 58 கண்மாய்களிலும், 2019-20ம் நிதியாண்டில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களிலும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 141 பொதுப்பணித்துறை கண்மாய்களுக்கு உட்பட்ட 30,55,890  கனமீட்டர் கண்மாய்கள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளன. மேலும், 339 மடைகள், 79 கலுங்குகள்  புதுப்பிக்கப்பட்டும், சீரமைக்கப்பட்டும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் (2020-21) ரூ.38.79  கோடி மதிப்பில் 61 கண்மாய்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டு நிர்வாக ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும், சரியாக நில அளவீடு செய்து கண்மாயின்  எல்லையினை குறியீடு செய்திடவும், ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையுடன் ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி  அகற்றப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியின் எல்லைகளை கண்டறிந்து எல்லைக் கற்களும் நடப்பட்டுள்ளது. அந்த  வகையில், பரமக்குடி வட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்புப் பணிகள்  மேற்கொள்ளப்படவுள்ள ஆனைகுடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் சம்பந்தப்பட்ட  ஆயக்கட்டு பாசனதாரர் சங்க பிரதிநிதிகளுடன் முன்னேற்பாடு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ஆனைகுடி கண்மாயினை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கண்மாயானது 20.50 ஹெக்டேர் பரப்பளவு நீர்பிடி பகுதியாகவும், 42.55 ஹெக்டேர் பரப்பளவு  ஆயக்கட்டு பகுதியாகவும் உள்ளது. கண்மாயின் கொள்ளளவு 11.05 மில்லியன் கன அடியாக உள்ளது. இக்கண்மாயில் 2,000மீ அளவிற்கு கரைகளை பலப்படுத்துதல், ஒரு மடையினை புதிதாக மீளக்கட்டுதல், 2  மடைகளை புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இத்திட்டத்தினை பயன்படுத்தி இப்பகுதி  விவசாய பெருமக்கள் சிறப்பாக விவசாயத்தை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள்  எ.சத்யபாமா, பி.ராஜேந்திரன், பி.ஆனந்த்பாபுஜி, பரமக்குடி வட்டாட்சியர்  செந்தில்வேல்முருகன் உட்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..