மதுரை மண்டல கண்காணிப்பு குழு சிறப்பு அலுவலர் சி.காமராஜ், ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர்இராமநாதபுரம், வண்டிக்காரத் தெருவில், கொரானா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, நடமாடும் மாதிரி சேகரிப்பு மையத்தை இன்று (04.05.2020) துவக்கி வைத்து பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது:மாவட்டத்தில் இதுவரை 2,642 பேருக்கு கொரானா பரிசோதனைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 20 பேருக்கு கொரானா தொற்று உள்ளது எனவும், 2,545 பேருக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 77 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை மூலம், சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்பால் இதுவரை 11 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 9 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு, அவர்களது உடல்நிலை சீராக உள்ளது.மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 10 உள்ளாட்சி பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் 14 கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் சில அத்தியாவசிய பணிகளுக்கு தளர்வு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இல்லை. இதனை முழுமையாக கண்காணிக்க காவல், வருவாய், பொது சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரானா பரிசோதனை மையம் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் கொரானா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளவும், முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.மதுரை மண்டல கண்காணிப்பு குழு சிறப்பு அலுவலர் சி.காமராஜ் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் கொரானா வைரஸ் தொற்று தொடர்பான நடமாடும் மாதிரி சேகரிப்பு மையத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார்.இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, இராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் சி.அஜித் பிரபுகுமார், நகராட்சி ஆணையர் என்.விஸ்வநாதன், காவல் துணை கண்காணிப்பாளர் கி.வெள்ளத்துரை, வட்டாட்சியர் முருகவேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
5
You must be logged in to post a comment.