கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராமநாதபுரம் பொதுமக்கள் நலனுக்காக ராஜ சேதுபதி நகரில் நடமாடும் காய்கறி விற்பனை சேவையை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் இன்று (31.3.2020) துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வரின் உத்தரவின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்திடும் நோக்கில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம், பட்டணம்காத்தான் என 3 இடங்களில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனைக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை ஒருங்கிணைப்புடன் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து சிரமமின்றி காய்கறிகள் வாங்கும் வகையில் நடமாடும் காய்கறி விற்பனை சேவை இன்று (31.3.2020) முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது இராமநாதபுரம் நகரில் 5 வாகனங்களில் பொதுமக்கள் சரியான விலையில் தரமான காய்கறிகளை வாங்க வழிவகை செய்யப்பட்டள்ளது. இத்திட்டத்தை இராமநாதபுரம் நகரின் அனைத்து பகுதிக்கும் விரிவுபடுத்திடும் வகையில் 50 நடமாடும் காய்கறி விற்பனையகங்கள் ஏற்படுத்திடவும், மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் நடமாடும் காய்கறி விற்பனையகங்கள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் காய்கறி விற்பனையகங்களை பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கும்போதும், கூட்டம் கூடாமல் 1 முதல் 2 மீட்டர் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக் அப்துல்லா, தோட்டக்கலை துணை இயக்குநர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.தனுஷ்கோடி, இராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் பொ.ராஜா, இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.