இத்தாலியின் லொம்பாட்லீயில் நோயாளி நம்பர் 1 என்பவர் தனக்கு காய்ச்சல் என மருத்துவமனைக்கு செல்கிறார், அவருக்கு சில மாத்திரைகள் கொடுத்து மருத்துவர்கள் அனுப்பி விடுகிறார்கள். அவர்அந்த காய்ச்சலுடன் மூன்று பெரும் விருந்துகளுக்கு செல்கிறார், கால்பந்து விளையாடுகிறார், தான் நடத்தும் கால்பந்து குழுவுடன் நீண்ட நேரம் செலவிடுகிறார், பயணங்கள் செய்கிறார்.
உலகை அச்சுறுத்தும் இந்த பெரும் தொற்றை இத்தாலி அரசு அறிந்து கொண்டு களத்தில் இறங்குகிறது. இத்தாலியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் உடனடியாக இத்தாலி அரசு சீனாவுக்கு செல்லும் விமானங்களை ஜனவரி 30 அன்று தடை செய்தது. ஆனால் அதற்கு முன்பே இருவர் சீனாவின் யூகானில் இருந்து இத்தாலிக்கு வந்திருந்தனர். இத்தாலியில் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் குடும்பங்களுடன் இத்தாலியில் வசிக்கிறார்கள். இத்தாலியின் லொம்பாட்லீ நகரத்திற்கு சீனாவுடன் நெருக்கமான வர்த்தக தொடர்புகள் உள்ளது.
பிப்ரவரி 23ஆம் தேதி இத்தாலியில் 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தேதியில் கொரோவால் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கவில்லை. நோயாளி நம்பர் 1 என்கிற அந்த 38 வயது நபர் மீண்டும் தனக்கு காய்ச்சல் என்று மருத்துவமணைக்கு சென்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நேரத்தில் அவர் மூலம் சமூக தொற்றாக அது மாறி 200 இத்தாலியர்களுக்கு அது பரவியிருந்தது.
சீனாவிற்கான நேரடி விமான சேவை தடைபட்ட போதிலும் மக்கள் அருகாமை நாடுகளில் வந்திறங்கி இத்தாலியை வந்தடைகிறார்கள். நேரடி விமானச் சேவையை தடை செய்த போதிலும் மக்கள் வழக்கம் போலவே பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இத்தாலி நோயின் தன்மையை அறிந்து கொண்டாலும் ஊரடங்கை படிப்படியாக அமல்படுத்துகிறது. இத்தாலி அரசு தனது பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் மார்ச் 4ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடுகிறது ஆனால் அதற்குள் கொரோனா 3089பேருக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இத்தாலிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவில்லை. ஒருபுறம் ஊரடங்கை அமல் செய்கிற நேரம் ஆட்சியில் இருக்கிற ஜனநாயக கட்சியின் தலைவர் நிகோலா ஜிகார்டீ ஒரு விருந்தில் இருந்து மதுக்கோப்பைகளுடன் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார், அதில் “எப்படி பட்ட நெருக்கடிகளிலும் நாம் நம் பழக்கங்களை மாற்ற இயலாது” என்று அறிவிக்கிறார் ஆனால் ஒரு வாரம் கழித்து நிகோலா ஜிகார்டீக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
அடுத்து இத்தாலியில் மார்ச் 11ஆம் தேதி அனைத்து உணவகங்கள், பார்கள் மூடப்படுகிறது. மார்ச் 22 ஆம் தேதி அனைத்து தொழில் நிறுவனங்களையும் மூடுகிறது, அத்தியாவசியமில்லாத உற்பத்தி நிலையங்களும் அடைக்கப்படுகிறது ஆனால் அதற்குள் 59138 பேருக்கு நோய் தொற்று பரவிவிட்டது.
கொரோனா தொற்று 7357 பேருக்கு உறுதி செய்யப்படுகிற நேரத்தில் தான் இத்தாலி அரசு தேசிய அளவிலான ஊரடங்கை அறிவிக்கிறது. இத்தாலிய அரசு வீட்டிலேயே இருக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டது ஆனால் மக்கள் அதை சரிவர கேட்கவில்லை, நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை. ஊரடங்கின் ஒரு கட்டம் அறிவிக்கப்பட்ட போது இளைஞர்கள் பெரும் எண்ணிக்கை ஒரே நாளில் சிறு நகரங்கள், கிராமங்கள் நோக்கி சென்று நோய் தொற்றை முதியவர்களுக்கு பறப்பினர்.
இத்தாலியால் இந்த பெரும் மரண ஓலத்தை தாங்க முடியவில்லை. அங்குள்ள தேவாலயங்கள் எல்லாம் பிணங்களால் குவிந்து வருகின்றன. சுடுகாடுகள் அனைத்துமே 24 மணி நேரம் இயங்கியும் பிணங்களை அடக்கம் செய்ய முடியவில்லை. தினசரி சில பத்திகள் மட்டுமே மரண அறிவிப்புகளை வெளியிடும் நாளிதழில் 10 முழு பக்கங்கள் மரண அறிவிப்புகள் அச்சிடும் அளவிற்கு மரணங்கள் பெருகிவிட்டது, இந்த நிலையை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
நோய் தொற்று அதிகரிக்க அதிகரிக்க மருத்துவமணைகள் நிரம்பி வழிந்தன. மருத்துவமணைகளில் படுக்கை வசதிகள், தீவர சிகிச்சை வசதிகள், செயற்கை சுவாச கருவிகள் என யாவற்றிருக்கும் பற்றாக்குரை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அரசு சில கடினமான முடிவுகளை எடுத்தது, 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இனி தீவிர சிகிச்சையளிப்பதில்லை என்று அறிவித்தது.
30 நாட்கள் கழித்து மார்ச் 23 ஆம் தேதி இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,927, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6820. மக்கள் அரசின் முடிவிற்கு ஒத்துழைக்காததன் விளைவை இத்தாலி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இத்தாலி இந்த பெரும் விலையை கொடுத்ததற்கான காரணங்களை ஆராயும் போது அங்குள்ள ஆட்சியாளர்கள் இந்த ஆபத்தை அழுத்தமாக தங்கள் மக்களுக்கு கடத்தத் தவறிவிட்டார்கள் என்று தெரிய வருகிறது. இந்த நோயின் தீவிரத்தை அது உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்திவரும் கடுமையான விளைவுகளை மக்களுக்கு அழுத்தமாக சொல்லத்தவறியதுதான் அல்லது உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பேராபத்து நம்மை அத்தனை சீக்கிரம் நெருங்கிவிடாது என்கிற அசட்டையா??
இத்தாலியில் நிகழ்ந்ததை வாசிக்க வாசிக்க நம் அரசு செயல்பட்ட விதத்துடன் மனம் ஒப்பிட்டு பார்க்கவே முனைகிறது, இருப்பினும் கடும் காலதாமதம் என்கிற போதும் நாம் நம் வீடுகளில் அடுத்த 21 நாட்கள் அடைபட்டுக் கிடைப்பதன் மூலம் தான் நாம் நம்மை காக்க முடியும், நம் சமூகத்தை காப்பாற்ற முடியும்.
You must be logged in to post a comment.