கொரோனா பயம் காரணமாக நாகூர் தர்கா தற்காலிகமாக மூடல், பல்வேறு நபர்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளும் நடவடிக்கையாக பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் தர்கா மார்ச் 20 அன்று (நேற்று) மாலை 4 மணியளவில் மூடப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, இம்மாதம் 31-ஆம் தேதி வரை யாத்திரிகர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதியில்லை என்று தர்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து அங்கு ஸ்வீட் கடை வைத்துள்ள தமீமுல் அன்சாரி கூறுகையில், “460 ஆண்டுகளில் இப்போதுதான் தர்கா முதன்முதலாக மூடப்படுவதாகச் சொல்கிறார்கள்.
தர்காவில் கடை வைத்திருக்கும் அனைத்து வியாபாரிகளும் அங்கு தங்கும் ஆதரவற்றவர்கள், வறியவர்கள், நோயாளிகள் உட்பட்டோரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.
மேலும், “வியாபாரிகள் நஷ்டமடைவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் வீடற்றவர்கள் பலர் அங்குதான் உறங்குவார்கள், இப்போது அவர்களெல்லாம் எங்கு போவார்கள் என்றே தெரியவில்லை.
என் கடையில் வேலை பார்க்கும் நபர்கூட தர்காவில் தங்கி வந்தவர்தான். இப்போது அவர் தங்குவதற்கு நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்.
ஆனால் பிறருடைய நிலையென்ன? கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரொம்பவும் அவசியமானவைதான்.
அதேசமயம், அரசாங்கம் இது பற்றியெல்லாம் யோசித்ததா என்று தெரியவில்லை.
நடவடிக்கை எடுத்தால் பலருக்கும் உதவியாக இருக்கும்” என்று கூறினார்.
You must be logged in to post a comment.