வாசுதேவநல்லூர் அருகே கூலித் தொழிலாளி உயரழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழப்பு-போலீஸார் விசாரணை..!
அருளாட்சி என்ற திருமலாபுரத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரவணா புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் மணி வயது 53. பெயிண்டராக பணியாற்றும் இவர் நேற்று அருளாட்சி என்ற திருமலா புரத்தில் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் திடீரென சிக்கி எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கருகிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மணியின் சடலத்தை கைப்பற்றி வாசுதேவநல்லூர் காவல்துறையிடம் பிரேதத்தை ஒப்படைத்தனர். போலீஸார் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். வாசுதேவநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மின்சாரம் தாக்கி பலியான மணிக்கு அமுதா என்ற மனைவியும்,விக்னேஷ், பிரபாகரன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூலிக்காக பெயிண்ட் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கியதில் மணி பலியானதால் அவரின் குடும்பம் சோகத்தில் மூழ்கி உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.