கச்சத் தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்., மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இன்று மாலை தொடங்கும் இந்தாண்டு விழாவில் பங்கேற்க இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 72 விசைப்படகுகள் மூலம் 2,510 பேர், 24 நாட்டுப் படகுகளில் 371 பேர் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.திருவிழா சென்ற பக்தர்களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவராவ் வழியனுப்பி வைத்தார்.
கச்சத்தீவு சென்ற பக்தர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள் பயணத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் அறிவுறுத்தினர்.கச்சத்தீவு சென்ற பக்தர்களுக்கான குடிநீர், பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்காலிக கூடாரங்கள், இறங்கு துறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை இலங்கை கடற்படையினர் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கவசம் மற்றும் மீட்பு குழு, மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 2,900 பேர், கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், நெடுந்தீவு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இன்று (மார்ச் 6) மாலை கொடியேற்றத்தை தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை, திருப்பலி, புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. நாளை (மார்ச் 7) காலை 9 மணிக்கு சிறப்பு வழிபாடு, திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.
You must be logged in to post a comment.