பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்-தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் பயனாளிகள் விண்ணப்பிப்பதற்கான வரும் 7ம் தேதி நகராட்சி , பேரூராட்சிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், திருநெல்வேலி கோட்டம் மூலமாக பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் (நகர்ப்புறம்) மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி பயனாளிகள் தாங்களாகவே கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் (300 சதுரடி பரப்பளவில் கான்கிரீட் கூரை வீடு ) குறைந்த வருவாய் பிரிவின் கீழ் வாழும் தகுதி வாய்ந்த குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பயனாளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியமாக ரூ. 2.10 லட்சத்தினை 4 தவணைகளாக பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் .
மேற்கண்ட திட்டத்தில் பயன்பெறும் வகையிலும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு வரும் 7ம் தேதி சிறப்பு முகாம் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற ஆதார் அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை , வங்கி கணக்கு புத்தகம், நில உரிமை ஆவணம், பட்டா ஆகியவற்றின் நகல்களுடன் தவறாது கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.