நெல்லையில் தலை சிறந்த தமிழ் எழுத்தாளரும், சர்வதேச தமிழாசிரியருமான அறிவரசன் மறைவு..
நெல்லையின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளரும், சர்வதேச தமிழாசிரியருமான அறிவரசன் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியரும், சிறந்த எழுத்தாளருமான அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி (81) உடல் நலக்குறைவால் 04.03.2020 புதன் கிழமை காலமானார்.
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், புத்தன் பேசுகிறான் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் அறிவோம் என்ற பெயரில் இலக்கணம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழர் தாயகம் என்ற பத்திரிகை மூலம் தமிழ் மொழியை உலகறியச்செய்தவர்.
திராவிட கழக நாளிதழின் முன்னாள் துணை ஆசிரியராகவும் பணியாற்றி,தமிழ் உணர்வை ஈழம் தொட்டு உலகெல்லாம் கொண்டு சென்று தமிழ் வளர்த்த பெருமை இவரையே சாரும்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று 2006 முதல் 2008 வரை ஈழத்தில் தங்கி மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார். அந்த அனுபவங்களை ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்ற பெயரில் புத்தகமாகவும் எழுதியுள்ளார். தமிழ்ப் பெயர் கையேடும் இவரால் எழுதப்பட்டதே.
மேலும் லண்டன், இத்தாலி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பித்துள்ளார்.
பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்த இவருக்கு பகுத்தறிவாளர் கழகம் தமிழிசை பாவாணர் என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் பைந்தமிழ் பகலவன் என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளன.
மேலும் இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நாளை தானமாக வழங்கப்பட உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.