மார்ச் 09, திங்கட்கிழமை திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம்:- அழைை்பு விடுக்கும் இளஞ்சிறுத்தைகள்.!
கடந்த 16-12-2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியன் பட்டணம் கிராமப் பஞ்சாயத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த முத்துநகரை சேர்ந்த கோமதி என்பவர் அன்று காலை பணிக்கு செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். அவருடன் சென்ற ஜெயலட்சுமி என்பவரும் படுகாயமடைந்தார். ஆனால் அரசின் சார்பில் இதுவரை எந்த நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு வெறும் 86 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று குடும்பம் நடத்திவந்த நிலையில் தற்போது கோமதியின் குடும்பத்தினரும், ஜெயலட்சுமியின் குடும்பத்தினரும் மிகுந்த வறுமையில் வாடுகின்றனர்.
இளஞ்சிறுத்தைகள் சார்பில் இக்குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் சென்ற 06-02-2020 அன்று பதிவுத்தபால் வழியே கோரிக்கை மனு அனுப்பினோம். ஆனாலும் இதுநாள்வரையில் எந்த முன்நகர்வும் இல்லை.
இந்நிலையில் இத்துப்புரவுப் பணியாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசு விரைந்து உரிய நிவாரண நிதி வழங்கி உதவிடக் கோரி எதிர்வரும் மார்ச் 09, திங்கட்கிழமை அன்று மாலை 5-மணிக்கு திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் வைத்து இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் போஸ் அவர்கள் பங்கேற்று கோரிக்கை உரையாற்றுகிறார். அனைத்து கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
அனைவரும் வருக!
இவண்
சு.விடுதலைச்செழியன் மாவட்ட அமைப்பாளர் – இசிஎபா விசிக – தூத்துக்குடி தெற்கு
You must be logged in to post a comment.