புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை அமைந்துள்ள தரங்கம்பாடியில் இருந்து மயிலாடுதுறைக்கு பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலிருந்தே ரயில் இயக்கப்பட்டு வந்தது . இதன்மூலம் தரங்கம்பாடியில் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றி சென்று விற்பனை செய்யவும், பள்ளி ,கல்லூரி மாணவர்கள் படிப்பதற்காக செல்லவும் இந்த ரயில் உபயோகமாக இருந்தது. இதேபோல நாகை , மயிலாடுதுறை, கும்பகோணம், பூம்புகார் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு வந்து செல்லும் பயணிகளுக்கும் இந்த ரயில் பயன்பட்டு வந்தது. ஆனால் 1982 ஆம் ஆண்டு முதல் இந்த ரயில் நிறுத்தப்பட்டது . இதனால் தரங்கம்பாடி, பொறையாறு ,தில்லையாடி, திருவிடைகழி ,மன்னம்பந்தல், செம்பனார்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிப்பு அடைந்தனர்.
தரங்கம்பாடி , மயிலாடுதுறை ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ,மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் காரைக்காலுக்கு வந்திருந்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் ஜெயராம் கட்கரி -யிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது .அதில் தரங்கம்பாடி – மயிலாடுதுறை ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அதேபோல இத்திட்டத்துடன் காரைக்காலை இணைத்து புதிய வழித்தடத்தை உருவாக்கி புதிய திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.