நான்கு வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்-தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை…
தமிழக முதல்வரால் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் அமைத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒ.ஏ.நாராயணசாமி தலைமையில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து தமிழ் விவசாய சங்கத்தின் மாநிலத்தலைவர் ஒ.ஏ.நாராயணசாமி கூறுகையில், விவசாய நிலங்கள் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தப்படுகிறது.இதனை அரசு கைவிட வேண்டும்.மேலும் அந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 80 லட்சம் அரசு வழங்க வேண்டும்.மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.
மேலும்,தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில்,’ திருச்சி -சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடம் தமிழக முதல்வர் அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் வருகிறது.
சிதம்பரம் முதல் மீன்சுருட்டி வரை, தேசிய நெடுஞ்சலை அமைக்க கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் நிலம் கொடுக்காமல் போராடினர். இதனால், நிலம் கையகப்படுத்த முடியாததால், சாலை ஒப்பந்தம் காலாவதியானது.
தற்போது இந்த சாலைக்காக புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
திருச்சி-சிதம்பரத்திற்கு ஏற்கனவே பழைய தேசிய நெடுஞ்சாலையானது சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், மீன்சுருட்டி, திருச்சி வழிதடத்தில் செயல்படுகிறது. தேவைப்பட்டால் இந்த சாலையை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.எனவே, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை உடனே கைவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.